Saturday, September 09, 2006

உளமாற நேசிக்கிறேன்

எதையாவது எழுதலாமென்றால் யோசிக்காமல் நினைத்ததை எழுதி வைக்கிறோம் அதுவே நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி எழுத ஏனோ தயக்கம் வரத்தான் செய்கிறது. இப்படி, நான் 'எழுதலாமா வேண்டாமா?' என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர் சொன்னார் "என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க" என்று கேட்டது 'சுறுக்'கென்றது. சரிதான் என்று பட்டதும் எழுதலாமென்றால் எங்கே நேரம்?

நேரம் கிடைத்தால்தானே?! நேரம் இருந்த போது எழுதலாமா?ன்னு யோசிச்சேன், எழுதலான்னு நினைக்கும் போது நேரமே இல்ல. கல்லைக் கண்டா நாயக்காணோம், நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஆகிப் போச்சு கத. எது நாய், எது கல் என்ற ஆராய்ச்சி வேண்டாம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பு தொடங்கி மூன்று மாதங்களாக செயல்பட்டுவந்தாலும், அமைப்பை முறைப்படி துவங்கி வைக்க முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போது அவர் துவக்க விழாவிற்கு கொடுத்த தேதி செப்டம்பர் 7. கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் நேற்று காலை முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா தலைமையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் முன்னிலையில், 'நக்கீரன்' கோபால், 'ஹிந்து' ராம், 'தினகரன்' கதிர்வேல் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

அமைப்பின் தலைவர் ஜி. கிருஷ்ணன், துணை தலைவர் முருகராஜ், செயலாளர் ரகுநாதன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். அமைப்பின் துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பிற்கான வலைத்தளமும் துவங்கி வைக்கப்பட்டது. மற்றும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர்களின் தொலைபேசி மற்றும் பத்திரிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் அடங்கிய புத்தகத்தை கவர்னர் வெளியிட
முதல் பிரதியை பரிதி இளம்வழுதி பெற்றுக்கொண்டார். முதலமைச்சருக்கு 1895ல் எடுக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் படத்தையும், 1920ல் எடுக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் தொடரூர்தி நிலையத்தின் புகைப்படத்தை கவர்னருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினர்.

முன்னதாக பழம்பெரும் புகைப்பட கலைஞர்கள் தினமலரில் இருந்த கே.விஸ்வநாதன், மகாராஷ்டிரா நிலநடுக்கத்தின் போது எடுத்த சிறந்த படத்திற்காகவும், மாலைமுரசில் பணியாற்றிய அமீது முதலமைச்சர் கருணாநிதியின் தாய் இறந்த போது அவருக்கு அறிஞர் அண்ணா ஆறுதல் சொல்வதுபோல எடுத்த புகைப்படத்திற்காகவும், ஹிந்துவில் இருந்த நாராயணச்சாரி, விளையாட்டு சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்காகவும் முதலமைச்சர் கையால்
பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

'இந்த செய்திக்கும் இவளுக்கும் என்ன?' என்று நீங்க மண்டையை உடைத்துக் கொள்ளும் முன்பே, கவுரவிக்கப்பட்ட அமீது என் தந்தையார் என்று சந்தோஷத்தோடு சொல்லிக் கொள்கிறேன். என் தந்தையின் பிறந்த தினமான செபடம்பர் ஏழாம் தேதியன்றே இந்த கவுரவ
விருது கிடைத்தது இன்னொரு மகிழ்ச்சி. உங்களை நினைத்தாலே பெருமையாயிருக்கிறது வாப்பா. உளமாற நேசிக்கிறேன் உங்களை அன்றைப் போல இன்றும்.

Saturday, September 02, 2006

எதற்காக வலைப்பூ?

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க "ஆரம்பிக்கலாம் யாருவேணாலும், ஆனா நீ எழுதுற எழுத்துக்கு பதிலடி வரும். தலையில குட்ட நெறைய பேர் காத்து கெடப்பாங்க. கன்னாபின்னான்னு திட்டி வரும் பெயருடனும் பெயரில்லாமலும். ஒரு பொது எடத்துல நின்னு உன் கருத்த சொல்றா மாதிரி வலைப்பூ. அதனால எழுதிற எல்லா கிறுக்கலையும் வலையேற்றாம உனக்கே 'ஆஹா நானா எழுதினேன்'னு தோணுற அளவுக்குள்ள பதிவை மட்டும் போடு" அப்படின்னு ஒரு பெரிய பில்டப்பே கொடுத்தாங்க. இலவசமா கிடைக்குது என்பதற்காக அப்படியேவா அறிவுரைய அள்ளிக்க முடியும்? எடுத்துக்கிறத மட்டுந்தான் எடுத்துக்க முடியும் அதான் என் வலைப்பூவையே கிறுக்கல்னு போட்டு பிரிக்காம எல்லாத்தையும் கொட்டி வைக்கிறேன் நீங்களும் பாவம் படிச்சு தொலைக்க வேண்டியிருக்கு.

யாரும் யாருடைய வலைப்பூவுக்கும் தேடிப் போவதில்லை மாறாக
* 'அண்மையில் மறுமொழி இடப்பட்ட இடுகை',
* 'பரிந்துரைக்கப்பட்ட இடுகை',
* 'அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை',
* 'தேன்கூடு போட்டி'யில் பங்கேற்றவர்கள்

இந்த மாதிரி இடங்களில் தலைப்பும் கூடவே வரும் நான்கு வரிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலே ஒரு பதிவை திறந்து படிக்கிறோம். அல்லது பதிவின் சுட்டியை தனிமடலிலோ, பின்னூட்டத்திலோ படிக்க தருவதால் படிக்கிறோம். படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் எல்லோரும் பதில் எழுதுவதில்லை அதிலும் ஒரு கணக்கு இருக்கு

* சிலர் பிடித்திருந்தாலும் சரி பிடிக்கவில்லையென்றாலும் சரி ஏதாவது பதில் எழுதி தன் வருகையை நியமனம் செய்து கொள்கிறார்கள்.
* சிலர் பாராட்ட மட்டுமே செய்வார்கள், நன்றாக இல்லை என்றால் படித்து விட்டு ஓடிவிடுவார்கள். (எண்ணிக்கையில் இப்படிப்பட்டவர்கள் குறைவு என்று சொல்லலாம்).

* சிலர் குறைகள் கண்டுபிடிக்கவே மற்றவரின் பதிவுக்கு போய் இரண்டு குத்து குத்திவிட்டு வரவில்லையென்றால் இவர்களுக்கு தூக்கம் வராது. இதில் தவறில்லை, குறை தெரிந்தால்தான் அடுத்த முறை நிறையாக இருக்கும்.

* சிலர் தனக்கு தானே ஒரு ரேஞ்சு வைத்துக் கொண்டு தனக்கு சரி சமமாக நினைக்கும் நபர்களின் பதிவுகளுக்கு மட்டும் போய் பதில் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். தன் உடம்பைவிட தலையின் எடை இவர்களுக்கு ரொம்ப அதிகம்தான்.

* சிலர் வாக்குவாதம் செய்ய, சண்டை போட, வம்பிழுக்கவே மற்றவர்கள் வலைக்கு போய் சுறுக்கென்று எழுதி வைத்துவிட்டு வருகிறார்கள். (இதுல எந்த குத்தும் இல்லப்பா நம்புங்க)

மொத்தத்தில் ஒருவரை மெச்சி ஒருவரும் அல்லது ஒருவரை தூற்றி மற்றவரும் வலைத்தளத்தில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிடுகிறார்கள்.

எதற்காக யாருக்காக எழுதுகிறோமென்றால்

* என் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க என்பதுதான் பலரது கருத்து. ஆனால் அந்த நோக்கம் கூட இல்லாமல் பல பேர் தம் கருத்தை சொல்வதை விட மற்றவனை தாக்குவதில் ரொம்பவும் பெரிய குறிக்கோள்களுடன் திரிகிறார்கள்.

* இப்படித்தான் எழுத வேண்டும், இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நிற்க வேண்டுமென்றெல்லாம் இல்லாமல் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைப்பது ஒரு விதம். எழுதுகோலைப் பிடித்து எழுதும் போது நம் மனசு சொல்றபடி எழுதுவோம் ஆனா இந்த கணினி முன்னாடி தட்டுறது இருக்கே அது நம்ம மூளை என்ன சொல்லுதோ அதன்படி கேட்டு செயல்படுகிறோம். அதனால்தான் பலர், மற்றவர்களைக் காயப்படுத்துகிறோமா என்று கொஞ்சம் கூட மனதால் யோசிக்காமல் செய்யும் செயலாகிவிடுகிறது.

* சிலர் எழுதும் போது எப்படித்தான் இப்படி எழுதுகிறார்கள் என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். இது நமக்கு தோணாம போச்சேன்னு தோணும். அப்படிப்பட்டவர்கள் எழுத்து சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுவது ரொம்பவும் கஷ்டமாகி போகிறது. (போன மாத தேன்கூடு போட்டியில் 'திரைச்சீலை' என்ற கதை படித்து அப்படி தோன்றியது. யாருமே அந்த கதையை படிக்கவில்லையோ அல்லது புரிந்துக் கொள்ளவில்லையோ தெரியவில்லை பத்து இடத்திற்குள்ளும் வராமல் போனது ரொம்ப கஷ்டமாக இருந்தது மனதுக்கு.)

* சிலர் வணிக முறையாக உபயோகிக்கிறார்கள் இந்த வலைப்பூவை. தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி பலருக்கு கொண்டு செல்ல, தன் பொருளை விற்க, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள என பலதரப்பட்ட வணிகம் இந்த வலைப்பூவில்.

சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.

1. இரகிசய டைரியை பலர் பார்க்க படிக்க வைப்பது. அதாவது நிகழ்வை, நடந்த சொந்த அனுபவத்தை, ஏமாற்றத்தை, வெற்றியை, சந்தோஷத்தை, சோகத்தை கொட்டி தீர்க இணையத்தில் ஒரு இடம். அதை மற்றவர்கள் பார்ப்பதில் படிப்பதில் ஆட்சேபனை இல்லாதவர்கள் இவர்கள்.

2. சிலர் நிறைய நட்பு சம்பாதிக்க, பொழுதுபோக்காக அரட்டையடிக்க, நூல்விட, கடல போட. இவர்களது ஒரு குறுகிய வட்டம் மட்டுமே நிறைய தேடல் இல்லாதவர்கள். எழுதுவதை 'ஆஹா' 'ஓஹோ' போட ஒரு சிறிய வட்டம் சம்பாதித்தால் போது என்று இருப்பவர்கள்.

3. நிறைய பேர் வித்வான்களாக, புலவர்களாக, அறிஞர்களாக, துத்துவ ஞாநியாக, அறிவு ஜீவிகளாக தன்னை நியமித்துக் கொண்டு தன் கருத்தை பலருக்கு கொண்டு செல்லும் எண்ணம் உடையவர்கள். இவர்கள்தான் தான் எழுதுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் மற்றவர்கள் என்ன எழுதிகிறார்கள் என்ற தேடலுடன் படிப்பவர்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றால்தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பது போல். கண்டதை படிப்பவர்கள்தான் கற்றவர்களாகிறார்கள். இவ என்னடா பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி எழுதிருக்காளேன்னு நினைக்காதீங்க, எனக்குத் தெரிஞ்ச காரணத்த நா சொல்லிட்டேன். எதுக்கு பதிக்கிறீங்கன்னு நீங்க சொல்லுங்க.

எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி