Saturday, December 30, 2006

தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்:

http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=



1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின்

தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார்.

148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல

ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?

இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண தண்டனை கொடுத்து கொண்டாடுகிறார்கள் காட்டுமிராண்டிகள்.

சதாமின் அழிவு முடிவா? இல்லை ஆரம்பமா? காலம்தான் பதில் சொல்லும்.

Friday, December 29, 2006

சிம்ரனுக்கொரு நியாயம் ரஜினிக்கொரு நியாயமா?

சந்திரமுகியில் வாய்ப்பு புட்டுக்கிச்சு, அப்போ சிம்ரன் கர்ப்பமா இருந்தது காரணம். வயிற்றில் புள்ளய வச்சிக்கிட்டு 'ரா.. ரா..' ஆடியிருந்தால் ஜோதிகா ஆடின 'அந்த' ஆட்டம் வந்திருக்குமா? இப்ப சிம்ரனுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருஷமாகிறதாம், மீண்டும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ருசி கண்ட பூனையாச்சே அவ்வளவு லேசில் திரைத்துறையை விட்டு போக முடியுமா?

அதனால்தான் மீண்டும் திரைதுறைக்கு வந்துவிட்டார். விளம்பரங்களில் வலம் வருபவரை இயக்குநர்கள் அணுகி தாரளமாக அக்கா, அண்ணி, அம்மாவாக நடிக்க நிறைய வாய்ப்புக்கள் தருகிறார்களாம்.

பேரன் கண்ட பிறகும் ரஜினி கதாநாயகனாக வருவார் நாம் பார்க்க வேண்டும். பூசணிக்காய் உடம்பை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறுசுகளுடன் கைக்கோர்த்து ஆடுவார் விஜயகாந்த் பார்த்துத் தொலைக்க வேண்டும். கமலுக்கு இன்றும் இரண்டு ஜோடிகள் கேட்கிறது. சரத்குமார் முகத்தில் பல சுருக்கம் வந்த பிறகும் நாயகிகளுடன் மரத்திற்கு மரம் மாறி கண்ணாமூச்சி விளையாடுவார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்ம கதாநாயகிகள் திருமணமாகி ஒரு குழந்தைப் பெற்றுவிட்டால் அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கிறது. என்ன அநியாயம். ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா? இன்று நேற்றல்ல காலகாலமாக நடந்து வரும் அநியாயம்தான் இது. 'பராசக்தி'யில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பண்டரிபாய், 'அன்னையின் ஆணை'யில், இன்னும் பல படங்களில் சிவாஜிக்கு தாயாக நடித்திருக்கிறார். இதே கொடுமையைதான் ரஜினி செய்தார், 'எங்கயோ கேட்ட குரலில்' மீனா மகளாக நடித்து விட்டு, 'வீரா', 'முத்து' படங்களில் ரஜனிக்கு ஜோடியாக வந்தார். ஆண் ரசிகர்களுக்கு எப்பவுமே பார்க்க புதுசு புதுசாக தினுசு தினுசாக இளமை துள்ளும் கதாநாயகிகள் வேண்டும் போலும். ஆண் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். பாவம் சபிக்கப்பட்ட கதாநாயகிகள்.

இந்த வரிசையில் சிம்ரன் தனி இரகம்தான். அணுகிய இயக்குநர்களுக்கு பதிலடியாக 'இன்னும் இளமை துடிப்பில்தான் இருக்கிறேன், கதாநாயகி வேடமென்றால் வாங்க, இல்லாட்டி சோலியப் பார்த்துக்கிட்டு போங்க' என்று சொல்லிவிட்டாராம். பிடிவாதத்திலும் ஒரு அர்த்தமிருந்திருக்கிறது, இப்போது தெலுங்கில் இரட்டை வேடம் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் இயக்குநர் ஓ.வி.எஸ். சவுத்ரி. படத்தின் பெயர் 'ஒக்கமகடு', ஜோடியாக பாலகிருஷ்ணா.

Wednesday, December 27, 2006

ஐஸ்வர்யா ராயின் முதல் கணவர்...

முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சல்மான் கான், விவேக் ஓப்ராய், அபிஷேக் பச்சன் என்று பலருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவருடைய முதல் கணவர் யார் என்பதை அறிந்து திடுக்கிட்டேன்.

வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மங்களூர் அருகில் உள்ள மங்கல்பாடியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் சுவாமியின் அறிவுரையின் பேரில்தான் இந்தக் கல்யாணம் நடந்ததாம். ஹரிவன்ஷ்ராய் பச்சனின் 99-ம் பிறந்தநாளையொட்டி வாரனாசியில் நடந்த பூஜையின் போது ஐஸ்- அபிஷேக்கின் இடது புறம் இருந்ததை வைத்துத்தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று புரளிகள் கிளம்பியது. ஆனால் ஐஸ்வர்யாவின் மாங்கல்ய தோஷம் காரணமாகவும், பிற தோஷங்களின் ஆதிக்கம் இருந்ததாலும் அவர்களது திருமணம் இந்த ஆண்டின் (2006) கூட்டுத்தொகை 8 என்பதாலும் அவர்களது திருமணம் 2007-ல் மகர சங்கராந்திக்குப் பிறகு ஜனவரி 14-க்கும் பிப்ரவரி 27-ம் தேதிக்கும் இடையில் நடைபெறலாம் என்று அந்த ஜோசியரே சொல்லியிருக்கிறார்.

இவரது அறிவுரையின் பேரில்தான் தோஷம் நீங்க ஐஸ்வர்யா ராயுக்கும் வாழை மரத்திற்கும் திருமணம் நடந்ததாம்.

எனது கேள்வியெல்லாம்:

1) இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மூடப்பழக்கத்திற்கு எப்படி துணைப் போக முடிந்தது ஐஸ்வர்யாவினால்?

2) அப்படியானால் அழகிப் போட்டிகளில் அறிவுக்கும் வேலை உண்டு என்பது வெறும் கண்துடைப்புதானா?

எப்படியோ அந்த வாழை மரம் அதிர்ஷ்டசாலி என்று பல ஆண்கள் வெதும்பினாலும் ஒரு முட்டாள் பெண்ணை மணந்த துயரமே மிஞ்சும் அந்த வாழை மரத்திற்கு என்பது என் கணிப்பு.

Sunday, December 24, 2006

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006

சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின பத்திரிக்கை 'தினத்தந்தி' சவுதி அரேபியாவில் துபாய் இருப்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைப்பிலேயே தவறு. தெரிந்த தவறு ஒன்று தெரியாதது எத்தனையோ?

செய்தி: // சிகிச்சை கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணின் குழந்தை பிணைக்கைதியாக சிறைவைப்பு துபாய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமானமற்ற சம்பவம்

துபாய், டிச. 24-

கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை துபாய் ஆஸ்பத்திரி பிணைக் கைதி போல பிடித்து வைத்துள்ளது.

இந்திய பெண் குழந்தை.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரெஹ்னா. ஆந்திர மாநில ஐதராபாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தாகிர் அக்ரம் முகமது (வயது 35). இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்........

Thursday, December 21, 2006

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க.

கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' என்றார் (பட்டிமன்றம்தான் உட்கார்ந்து பேசுவாங்களா? - லியோனி உட்கார்ந்துதானே தீர்ப்பு சொல்வார், நாங்களும் தான் உட்கார்ந்து கொண்டே பாடுவோம் என்பது போல்). போட்டாச்சு உட்கார்ந்து பாடினார்கள் நாலு பேரும் சேர்ந்து மாறி மாறி பாட்டு 'மாரி' பொழிந்தார்கள்.

அதன் பிறகு கங்கை அமரன் சொன்னார், "நீங்க நுழைவு கட்டிணமெல்லாம் வைக்காம எப்படி இலவசமா இந்த நிகழ்ச்சிய நடத்துறீங்களோ அதே மாதிரிதான் நாங்களும் ஒரு பைசா வாங்காம வந்திக்கோம்" என்றார். (நான் உடனே எங்க குடும்பத்தினரிடம் சொன்னேன் எல்லோரும் சேர்ந்து அண்ணனுக்கு ஒரு 'ஓ' போடலாமென்று, 'ஓ' போட்டு கைத்தட்டினோம்.) பிறகு எஸ்.பி.பி. சரணை அழைத்தார், அவரிடம் "என்ன சரண் எத்தன கிலோ பையோட வந்தீங்க இப்ப எத்தன கிலோ பையோட ஊர் போகப் போறீங்க" என்றார், சரண் சொன்னார் "காசு வாங்காம நிகழ்ச்சி நடத்துறதால ஒண்ணும் வாங்கல, வாங்க காசுமில்ல" என்று. (பார்க்கவே பாவமாக இருந்தது). க.அமரன் தொடர்ந்து "சரண் காசில்லன்னா என்ன கடன் அட்டை வச்சிருப்பீங்களே தேய்க்க வேண்டியது தானே" என்று வம்பிழுத்தார். பாவம் சரண் "செலவாகிடும்னு வீட்டிலேயே வச்சிட்டு வந்திட்டேன்" என்றார். (நாங்களே ஒரு பதினோரு உருப்படி எங்க குடும்பதிலிருந்து போயிருந்தோம். அதனால் சொன்னேன் காசு வாங்காம வந்திருக்காங்க கடைசி வரை இருந்து கையையாச்சும் தட்டிட்டு போவோம்ன்னு). நிகழ்ச்சியில் சில பாடல் மட்டுமே முழுமையாக பாடினார்கள். மற்றவையெல்லாம் தொடர் பாட்டுதான். அப்புறம் நேயர் விருப்பம் தந்தார்கள். விரும்பிய பாடல் நான்கு வரி பல்லவி மட்டும். நான் விரும்பி கேட்டேன் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' மாயாவி படத்திலிருந்து. பாடினார் சரண். இப்படியே நிகழ்ச்சி பன்னிரெண்டு மணி வரை நடந்தது.

அதற்கு மறு வாரம் 'துபாய் தமிழ் சங்கம்' உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. விழாவைப் பற்றியும், அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். குறையாக முதலில் பேசியவர் என்னைப் போலவே கங்கை அமரன் மற்றும் குழுவினருக்கு எந்த கட்டணமும் தராமலிருந்தது குறித்து வருத்தப்பட்டார். அவருக்கு அமைப்பிலிருந்து அல்லது உறுப்பினர்கள் சேர்ந்தாவது ஏதாவது பணம் தந்திருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அமைப்பின் தலைவர் சபேசன் விளக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் புரிந்தது கங்கை அமரன் மற்றும் குழுவினர்கள் காசு வாங்கியிருக்கிறார்கள். அந்த ஒப்பந்த காகிதங்களையும், பணம் பெற்றுக் கொண்ட கையெழுத்துக்களையும் காட்டினார்கள். அதிர்ந்து போய் விட்டோம். பின்ன ஏன் அவர்கள் அப்படி பேசினார்கள் என்று கேள்வி வந்தது. தலைவர் சபேசன் சொன்னார் "அவங்க சின்னப்புள்ளதனமா நடந்துக்கிட்டாங்க அதற்கு நாம் என்ன செய்ய முடியுமென்று" வருத்தப்பட்டார்.

என்னா ஆளுய்யா இந்த கங்கை அமரன்?? என்னை டபாச்சா மாதிரி இத்தனை நூறு பேர்களை நம்பவச்சிட்டார். இப்ப சொல்லுங்க கங்கை அமரன் அரசியலுக்கு வர தகுதிப் பெற்றுவிட்டார்தானே?!

Wednesday, December 20, 2006

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.

'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! நான் வீட்டிலிருந்து கொண்டு வந்தாச்சு'ன்னு தட்டிக்கழிச்சிட்டேன். ஆனா மத்த வெள்ளக்காரருங்க ('வெள்ளக்காரன்'னா கொஞ்சம் மரியாத கொறவா இருக்கும் அதான்) எல்லாம் 'வேணும் வேணும்'னாங்க. அவளும் 10 திர்ஹம்ஸ் (அதாவது 130 ரூபாய்) ஆகும் என்று எல்லோரிடமும் வசூலித்தாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொடுத்தார்கள் எல்லோரும் அவ ஊருக்காரங்கதான் (வெள்ளக்காரரருங்க), கீழ் கடையில் போயி மூணு ரூபாய்க்கு (ரூபான்னா திர்ஹம் என்று பொருள் கொள்க, அப்படி சொல்லி இருபது வருஷத்திற்கு மேல பழக்கமாயிடுச்சில்ல) ரொட்டி வாங்கி, 5 ரூபாய்க்கு மயூனைஸ் வாங்கி, சில காய்கறிகளும் வாங்கி, மொத்தத்தில் வெறும் 15 திர்ஹம் மட்டும் செலவழிச்சி பொருள் வாங்கி வந்து ரொட்டிய வெட்டி சாண்ட்விச், அதில் மயூ தடவி, காய்களை உள்ளே அடுக்கி போட்டுக் கொடுத்தாள். சாப்பிட ஆரம்பித்தார்கள். அவளும் "எப்படி இருக்கு சுவை" என்று ஸ்டைலாக கேட்க, ஒருவர் "'ம்ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு, எப்படி செஞ்சீங்க" (சமையல் குறிப்பு வேறையான்னு நினச்சிக்கிட்டேன்). இன்னொருவர் "ரொம்ப சிரமமெடுத்து செஞ்சது போலிருக்கு, சுவை நல்லா இருக்கு" (கஷ்டகாலண்டா சாமி! ). இப்படி ஒவ்வொருவரும் 'ஆஹா' 'ஓஹோ' பிரமாதம்ன்னு சாப்பிடுறாங்க (சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி). இவள் பதிலுக்கு "பின்ன சுவையாகத்தானே இருக்கும், அன்போடு பரிமாறியதல்லவா" என்றாள் அடக்கமாக. எனக்கு சிரிப்பு தாங்கல. என்னைப் போலவே வீட்டிலிருந்து கொண்டு வந்தவன் நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று முணுமுணுத்தான்.

இந்த கேண கிறுக்கனுங்க (முட்டாள்கள் ஆகிவிட்ட பின்பு இவர்களுக்கு மரியாதை எதக்கு?) அத சும்மா சாப்பிட்டு போகம என்னைப் பார்த்து 'இந்த இந்தியர்கள் நீங்கள் எப்படித்தான் தினமும் சோறும் கறியும் சாப்பிடுகிறீர்கள் ரொம்ப செலவாகவில்லையா?' என்று கேட்டுவைக்க. நானும் உடனே "நாங்க வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம், இங்க வந்து வாங்குவதில்லை என்று அப்பாவியாக பதில் சொன்னதில் உள்ள சூசகத்தையும் மரமண்டைகளுக்கு புரியவில்லை. இவர்கள் ஏமாந்தார்களா அல்லது அவள் சாமார்த்தியசாலியான்னு நீங்களே சொல்லுங்க.

Tuesday, December 19, 2006

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:

அடித்தே இன்புறுகிறாய்
நல்ல விஷயமோ
கெட்ட விஷயமோ
வாழ்க்கையின் ஆரம்பமோ
வாழ்க்கையின் முடிவோ
அடிக்காமல் அடங்காதா
விசேஷம்?
இருக்கும் போதுதானென்றால்
இறந்த பிறகுமா?

Sunday, December 17, 2006

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்து
எழுதும் போதும்

ஆபாச படத்தை
பார்க்க கூடாத வயதில்
பார்க்கத் துணிந்த போதும்

கல்லூரி மறந்து
ஊர் சுற்றும் போதும்

சுருட்டு, மது, மாது
என்ற போதும்

காதலியுடன்
ஓடிப் போக நினைக்கையிலும்

தடுத்து நிறுத்தி
எடுத்துரைக்காமலிருக்க
முடியவில்லை என்னால்

உளியாகத்தான் எனை
நினைத்திருந்தேன்
உடைப்பேன் நட்பையென்று
அறியாமல்
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி