Wednesday, February 21, 2007

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன்.

என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் என்றால் என்னது, எப்படி இருக்கும்?" என்று அப்பாவியாக கேட்டாள். ஏனெனில் அவள் ஒரு ஐரோப்பிய லெபனான்காரி. விளக்கம் தரும் முன்பே அவள் "ஓ! அந்தக் கவர்ச்சி உடைதானே?" என்று நக்கலாகச் சிரிக்க. "என்ன சொல்கிறாய்?" என்றேன் ஆச்சர்யமாக. "ஆமாம், ஒரு நீளமான துணியைச் சுற்றிச் சுற்றி எதையுமே மறைக்காமல் கட்டுவீர்களே? அதுதானே!! " என்றாள் மறுபடியும் ஒரு புன்முறுவலுடன். எனக்கு சரியான கோபம், அவள் நமது தேசிய உடையைச் சொல்கிறாள் என்று புரிந்தது, இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு "அதன் பெயர் 'சேலை'. ஆனால் நீ சொல்வது போல் கவர்ச்சியான உடை இல்லையே?!" என்றேன். " இரு. உனக்குக் காட்டுகிறேன்" என்று கூகிளில் தேடினேன். உடன் வந்து விழுந்தது இந்த படம் தான் (விக்கிபீடியாவில்). நொந்து போனேன்.
இத காண்பிச்சா முடிவே கட்டிடுவான்னு தேடித் தேடி ஒரு ஒழுக்கமா புடவை கட்டியிருக்கும் பெண்ணை காண்பித்து தப்பித்துக் கொண்டேன்.


முன்பெல்லாம் 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்ற சொற்களை அடிக்கடி கேட்டிருப்போம் இப்போது அந்த சொற்கள் காணாமலே போச்சு. மற்றவர்கள்தான் அப்படின்னா தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ப்பெண்களும் இப்படித்தானே இருக்கிறார்கள்! சரி இங்கதான் இப்படியென்றால் சென்னையில் இதைவிட படு மோசம். உள்ளாடையை மறைக்கமட்டுமே முதுகில் சின்ன மறைவு, அதுவும் போய் முழுதுமாக திறந்தவெளி ஜன்னல், இறக்கமாக தொப்புள் தெரியும் படி அடுக்கிய சேலை. நம்ம தேசிய உடையே உருமாறி வருகிறது ரொம்ப வருத்தம்தான்.


சரி சேலைதான் அப்படியென்றால் மற்ற உடைகளும் அப்படித்தான் இருக்கிறது.
- இறுக்கமான மேல்சட்டை, புடைத்துக் கொண்டிருப்பதை கண்ணால் அளந்து கொள்ளுங்கள் என்பது போல.
- இறக்கமான கழுத்து வைத்து மேல் கோடு தெரிவது.
- தொப்புள் தெரிய மேல்சட்டையை குட்டையாக அணிவது
- எல்லாம் தெரியும்படி கண்ணாடி உடை அணிவது.
இப்படி 'பேஷன்' என்ற பெயரில் மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அப்படியே மாறி வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஊடகம் மற்றும் திரைப்படங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கு நாம் இடுப்பு தெரிய சேலை கட்டுவது அதாவது வயிற்றைக் காட்டுவது கவர்ச்சி. இலைமறைவாய் காய்மறைவாய் தெரியாமல் மேலே அப்படியே காட்டுவது, தொடை தெரிய கவுன் போடுவது நமக்கு கவர்ச்சி. கேரளாவில் மேல் துண்டு போடாமல் இருப்பது கவர்ச்சியில்லை ஆனால் குட்டைப் பாவாடை போட்டால் கவர்ச்சியாம். இப்படி இடத்திற்கு இடம் வெவ்வேறு உறுப்புகள் கவர்ச்சி.

இதையெல்லாம் விட பெரிய கொடுமை, கீழ் உள்ளாடை தெரிய கால்சட்டையை இறக்கமாகப் போடுவது. உள்ளே 'ஜி' தெரிந்தால் அதிலும் இவர்களுக்குப் பெருமை. முதலில் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என் சக தோழியிடம் உள்ளாடை தெரிகிறது என்று சுட்டிக்காட்டினேன் (சேலையை கவர்ச்சி என்று சொல்லியவள் இல்லை இவள் இந்தியன் தான் ஆனால் இந்தி பேசுபவள்). அதற்கு அவள் "இப்ப இதுதான் பேஷன்" என்று 'பேஷனாக' சொல்லிவிட்டு சரி செய்யாமலே சென்றாள். கருமம் என்று நினைத்துக் கொண்டேன். இப்ப அந்த பேஷனும் போய் இன்னும் கொடுமையான 'பேஷன்', அதாவது கால்சட்டையை ரொம்ப கீழ் இறக்கிப் போட்டு கீழ் கோடு தெரிவது. மேல் கோடு காட்டியது போதாதென்று இப்போது கீழ் கோடு காட்டுகிறார்கள். எங்க போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.
கல்லூரி பெண்களிடம் இப்படி போனால் ஆண்கள் பார்க்காமல் கேலி செய்யாமல் என்ன செய்வார்கள் என்று கேட்டால். 'இப்படி ஆடை உடுப்பது எங்க இஷ்டம் அதில் உங்களுக்கென்ன கஷ்டம், பார்க்காவிட்டால் அவர்களுக்கு இல்லை நஷ்டம்' என்று டி.ரா. பாணியில் பதில் வருகிறது. 'எப்படியும் உடை அணிவோம் மற்றவர்கள் ஏன் பார்க்கிறார்கள். ஆண்கள் மட்டும் மேல் சட்டையில்லாமல், லுங்கியை மடித்து மேலே கட்டுதல் என்று இருக்கலாம், ஆடைகளை எங்கள் விருப்பத்திற்கேற்ப அணியக் கூட சுதந்திரம் இல்லையா?' என்று பெண்ணீயம் பேசும் விதண்டாவாதிகளை ஒன்றும் சொல்வதற்கில்லை.

இன்று என் மகளின் பிறந்தநாள். அவளுக்குச் சென்னையிலிருந்து வாங்கி வந்திருந்த கால்சட்டையும், கையில்லாத மேல் சட்டையும் அணிந்தேன். அந்தக் கால்சட்டை கீழே இறக்கமாக அவள் உள்ளாடை தெரியும் படி இருக்க. நான் ஒழுங்காகப் போட்டுவிட்டேன். அவள் கேட்கிறாள் "ஏன் ம்மா இந்த கால்சட்டை வாங்கினீங்க, ரொம்ப இறக்கமா இருக்கு என் ஜட்டிலாம் தெரியுது" என்று சலித்துக் கொண்டு தூக்கி தூக்கிவிட்டுக் கொண்டாள். அந்த மூன்று வயது சின்ன குழந்தைக்கு இருக்கும் அறிவும் கூச்சமும் துளியாவது 'பேஷன்' என்று அலையும் வளர்ந்த பெண்களுக்கு வராதா?

Monday, February 19, 2007

கைக்கு எட்டியது


அக்கம் பக்கத்து பசங்களுடன் மலிவான மட்டைகள் வாங்கி அதில் கோழியிறகு பூ வைத்து பிரமாதமாக விளையாடுவதாக நினைத்துக் கொள்வேன். அதுதான் டென்னிஸ் என்பதுபோல் பிரம்மையுடன் அது மிக சுலபமான விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். என் அக்காவின் கணவர் ஒரு டென்னிஸ் கோச்சர். அவர்களிடம் எனக்கும் விளையாட ஆர்வம், உங்க மாணவிகளைவிட நல்ல விளையாடுவேன் என்று புருடா விட்டு, அவர்கள் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு என்னையும் அழைத்து செல்ல செய்தேன். அங்கு போய் பார்த்தால் பந்தை வைத்து விளையாடுகிறார்கள். நானும் நல்ல விளையாடுவேன் என்பது போல் மட்டையை எடுத்துக் கொண்டு பந்தை ஒரு தட்டு தட்டினேன், கோட்டுக்கு அந்த பக்கம் போய் விழுந்தது பந்து மட்டுமல்ல மானமும்தான். சரி இது சரிப்படாது தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் உத்தமமென்று இருந்துவிட்டேன். ஆனாலும் பிரபலங்கள் விளையாடும் போது அவங்களை நேரில் பார்கணும்னு எப்பவுமே யோசிச்சதுண்டு.

இப்பதான் துபாய் ஷாப்பிங் ·பெஸ்டிவல் (DSF) என்று அழைக்கப்படும் திருவிழா துபாயில் கோலாகலமாக பிப்ரவரி 2ஆம் தேதி முடிவடைந்தது. இந்த விழாவின் முடிவில் தான் எப்போதுமே சில முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் நிகழும். அதில் மிக முக்கியமானது துபாய் ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி. இன்று 19ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை பெண்களுக்கான ஆட்டமும், பிப்ரவரி 26ஆம் தேதியிலிருந்து மார்ச் 3ஆம் தேதி ஆண்களுக்கான ஆட்டமும் நடக்கவிருக்கிறது.

ஆண்கள் பிரிவில் 32 பேரும் அதாவது 16 இரட்டையர் ஆட்டமும், பெண்கள் பிரிவில் 28 பேர் - 16 இரட்டையர் ஆட்டமும் நடைபெறும். உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெய்னை சேர்ந்த ரஃபேல் நாதல் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் சாம்பியனான ஜஸ்டின் ஹெனினும் கலந்துக் கொள்கிறார்கள்.

துபாய் ஆட்சியாளரும், அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்துமால்தான் இந்த துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அமைக்கப்பட்டு துபாய் டியூட்டி ப்ரீயால் நடத்தப்படுகிறது.

ஏவியேஷன் கிளப்பில் நடக்கும் துபாய் டியூட்டி பிரீ ஆண்கள் ஓபன் டென்னிஸ் 1993ல் தொடங்கியிருந்தாலும் அதிகாரபூர்வமாக 5000 அமர இடம் கொண்ட துபாய் டென்னிஸ் ஸ்டேடியத்தில் துவங்கியதென்னவோ 1996ல் தான். இதற்கான பரிசுத் தொகை $3 மில்லியன். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா $1.5 மில்லியன். மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்கி 7 மணி வரை நீடிக்கும்.

நுழைவுக் கட்டணம் திர்ஹம் 30/-ல் தான் (350 இந்திய ரூபாய்). தொலைக்காட்சியில் இப்ப பார்க்காத டென்னிஸை நேரில் பார்க்க வாய்ப்பிருந்தும் வசயிருந்தும் நேரமில்லை இதுதாங்க கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு சொல்றாங்க போல!

Wednesday, February 14, 2007

அன்பர்கள் தினம்

ல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.

* சொந்த படமாக இருக்க வேண்டும்.
* உங்க படத்தை நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.
* படத்தின் அளவு 4 x 6 ஆக இருக்க வேண்டும்.
* படத்தின் கோப்பு 256KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* அனுப்ப வேண்டிய கடைசி நாள் 'காதலர்கள் தினம்' எப்போது என்று கண்டுபிடித்து அந்த நாளில் சரியாக கிடைக்கும் படி செய்ய வேண்டும்.



சரி விஷயத்திற்கு வருவோம்...

யாரோ 'வாலண்டைன்' என்பவருக்காக பிப்ரவரி 14-ஐ நாம் ஏன் கொண்டாட வேண்டும்? நாள் பார்த்தா காதலிக்க வேண்டும்?

வணிக ரீதியாக, வியாபார ரீதியாகப் பெருகிவிட்ட புது புது தினங்களை மேல்நாட்டவர்கள் கொண்டாடுவார்கள். ஏனெனில் காதலிக்கவும் ஒரு தினம் ஒதுக்கித்தான் செய்வார்கள். அன்னையர் தினத்தில்தான் 'அன்னை' இருப்பதே இவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் உறுதியான அன்புள்ளங்கள் கொண்ட 'இந்தியர்கள்' நமக்கு இது சரிப்படுமா?

உங்களவரை/வளை சந்தித்த அல்லது உங்கள் காதல் கைக்கூடிய அல்லது உங்கள் காதலைத் தெரிவித்து இருவரும் ஒருசேர மலர்ந்த தினத்தை காதலர்கள் தினமாகக் கொண்டாடலாமே?

வியாபார நோக்கமில்லாமல் இலவசமான இந்த வலைப்பூவில் இலவசமாக ஒரு பதிவு. ஹே! இலவசமாக சில படங்களும்.

அப்புறம் இன்னொரு விஷயம் மேலே உள்ள பரிசுப் போட்டி சும்மா 'அல்வா'ங்கோ!








Saturday, February 10, 2007

அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 'டாஷ்' என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைத்திருந்த காலத்தில் காதல் செய்யும் தோழிகளை கெட்ட பெண்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு வள்ளுவர் கோட்டம் போகாமல் ஜகா வாங்கிவிட்டேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலையைக் கண்ட போது விண்ணப்பித்தேன் உள்ளூர் வள்ளுவர் கோட்டம் போக வேண்டுமென்று அது இந்த முறை பயணத்தில் நிறைவேறியது.

வள்ளுவர் கோட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் என் பங்குக்கு:

தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் 'திருக்குறளை' தந்த திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட நினைவகம்தான் வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு ஆளூநர் திரு.கே.கே.ஷா அவர்கள் தலைமையில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பக்ருத்தீன் அலி அகமது அவர்களால் 'வள்ளுவர் கோட்டம்' சென்னையில் திறந்து வைக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் சிற்பத் தேர்:
இது தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் திருக்கோயில் வடிவமைப்பு உடையது. இதன் பீடம் 25 அடி சதுரப் பளிங்கால் அமைந்தது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் இத்தேரை இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.



பெரிதும், சிறியதுமாக பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லாலானவை. பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி பருமன் 2 1/2 அடி. தேரின் அடித்தள அடுக்குகளில் மிக நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. இவை குறிப்பிட்ட குறட்பாக்களின் பொருளை விளக்குகின்றன. திருவள்ளுவர் சிலை உள்ள கருவறை, தரையிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. இது 40 அடி அகலத்தில் எண் கோண வடிவாக அமைந்தது.

அரங்கு குறள் மணிமாடம் மாடி:

அரங்கம்: தொல்பெரும் தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள 'தோரணவாயில்' பார்வையாளர் அனைவரையும் அரங்கத்திற்கு வரவேற்கிறது. தூண்கள் ஏதுமில்லாத இவ்வரங்கத்தின் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்குகளில் இதுவும் ஒன்று. 4000 பேர் நன்கு அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க இயலும். இந்த அரங்கத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் உண்டு. (நாங்கள் சென்றிருந்த போது ஏதோ பருத்தி ஆடைகள் கண்காட்சி மறுதினத்திலிருந்து தொடங்கப் போவதால் ஏதேதோ வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது) அரங்கத்தைச் சுற்றி தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. இதே போல் மேல் மாடியில் ஒரு மைய மாடியில் ஒரு மைய மாடமாகத் தாழ்வாரம் உள்ளது. இதுவே குறள் மணிமாடம்.

குறள் மணிமாடம்: இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன. சில முக்கிய குறள்களை விவரிக்க அழகிய ஓவியங்களும் நிரம்பியிருந்தது. ஆனால் அந்தப் புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ள குறளின் நடுவில் திருஷ்டிக்காகவா என்று தெரியவில்லை வரிசையாக எல்லா புத்தகத்தின் நடுவிலும் வெற்றிலை சுவைத்துத் துப்பிய கறைதான் இருந்தது.


வேயாமாடம்: திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல கோபுரம் கலசம் ஆகியவற்றைக் காண வேயாமாடம் அமைந்துள்ளது. இதன் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. இங்கு கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை, மூன்றின் நிழலுருவம் தோன்ற மூன்று நீர் நிலைகள் இருந்திருக்க வேண்டிய இடம் வறண்டு கிடந்தது. '6 மணியாச்சு கிளம்புங்க' என்று பிரம்புடன் வரும் நபரிடம் 'ஒரு நிமிடம்' என்று சொல்லிவிட்டு வேயாமாடத்திற்குச் செல்லும் படிக்கட்டில் அவசரமாக மூச்சிரைக்க ஓடி திருவள்ளுவர் சிலையை தரிசித்துவிட்டு படமும் எடுத்துவிட்டு கீழே வந்துவிட்டேன்.

சுற்றாடல்: சிற்பத்தேர், அரங்குகள் போக சுற்றியுள்ள பகுதியில் அலங்காரத்திற்காக பூஞ்செடிகளும் மற்ற செடிகளும் வைத்திருப்பது ஒரு சின்ன பூங்காவாக காட்சியளிக்கிறது.



இந்த மாதிரியான ஒரு இடம் வெளிநாட்டில் இருந்தால் எவ்வளவு அழகாகப் பராமரிப்பார்கள். எவ்வளவு பாதுக்காப்பாக கவனித்துக் கொள்வார்கள். இந்த இடத்தை வைத்து எத்தனை சுற்றுலா பயணிகளைக் கவரலாம்? அரசாங்கத்திற்கு பராமரிக்க பணமில்லையென்றால் கூட 'அனுமதி இலவசம்' என்றில்லாமல் நுழைவுக் கட்டணம் வைத்து அந்த வருமானத்தில் இன்னும் அழகாக வைத்திருக்கலாமே? ஆசியாவிலேயே பெரிய அரங்கில் ஒன்றான இந்த அரங்கில் எத்தனை பெரிய நிகழ்ச்சிகள் நடத்தி எவ்வளவு அழகாக பராமரித்து இன்னும் பிரமாதமாக வைத்திருக்கலாம்? இப்பவும் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன, மந்திரிகளும் வந்து கலந்து கொள்ளத்தான் செய்கிறார்கள் ஆனால் முழு அக்கறை யாருக்கும் ஏனில்லை? அவ்வளவு பெரிய இடத்தைப் பராமரிக்க, பாதுகாக்க இரண்டே ஆட்கள் போடப்பட்டுள்ளார்கள். 'துப்பாதே' என்று மக்களை விரட்டவே ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு ஆள் வேண்டுமே. நிறைய வருமானம் வரும்படி செய்தால், அதற்கான செலவுகள் செய்யவும் தயக்கமிருக்காதே? அரசாங்கத்தைக் கடிந்தும் குற்றமில்லை நம் மக்களைச் சொல்ல வேண்டும், ஏன் தான் நம் மக்களும் அசுத்தம் செய்கிறார்களோ? எப்படித்தான் திருக்குறள் மீது 'துப்ப' மனசு வருகிறது? சுத்தமாக ஒரு இடமிருந்தால் மத்தியில் துப்ப மனசு வராதுதானே? ஸ்பென்சர் பிளாசா, சிட்டி செண்டர் நடுவில் துப்பவா செய்கிறார்கள்? என்னவொரு பாரபட்சம்.?!!

தமிழக அரசு வள்ளுவர் கோட்டம் பராமரிக்கவென்று ஒதுக்கிய பணத்தை அம்மா ஆட்சியில் வேறெங்கோ ஒதுக்கிவிடுவார்களாம் காரணம் கீழே உள்ள இந்த படம்தான்.

ஆட்சி சண்டையில் தவிப்பது உயிருள்ள மக்கள் மட்டுமல்ல 'திருவள்ளுவரும்தான்'.

சமீபத்திய செய்திப்படி தமிழக அரசு ரூ.60 லட்சத்தை வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க ஒதுக்கியுள்ளார்கள். பணம் கொட்டிப் புதுப்பித்த பிறகாவது மறுபடியும் நாசமாகாமல் பராமரிக்கிறார்களா என்று பார்ப்போம்.

Wednesday, February 07, 2007

ஒரு மாலையும் சொதப்பல் சந்திப்பும்

சென்னை பயணம் இனிதாக நிறைவாக அமைந்தது. முப்பது நாள் செல்லும் பயணமெல்லாம் அம்மா வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்குமே மாற்றி மாற்றி போய் கொண்டு கடைசியில் எங்கும் ஒழுங்காக இல்லாத உணர்வோடு துபாய் வந்து சேருவேன். இந்த முறை அப்படியில்லாமல், 10 நாட்கள் விடுமுறையில் வந்த நான், ஹஜ்ஜிலிருந்து திரும்பி வந்த பெற்றோர்களையும் பார்த்துச் செல்வதற்காக விடுமுறையை 15 நாட்களாக நீட்டித்துக் கொண்டு நிறைவான பயணமாக மாற்றிக் கொண்டேன்.


வயோதிகர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்று பார்க்கக் கடமைப்பட்ட எல்லாவரையும் பார்த்தது போக நெருங்கிய பந்தத்தின் திருமணத்தில் கலந்துகொண்டு எல்லா சொந்தங்களையும் ஒருசேர பார்த்து மகிழ்ந்து, ஊரையும் கொஞ்சம் சுற்றுகிறேன் பேர்வழியாக கடற்கரை, வள்ளுவர் கோட்டம், ராயல் சர்க்கஸ், இரண்டு திரையரங்குகள் (அபிராமியில் 'போக்கிரி',பிரார்த்தனாவில் 'தாமிரபரணி'), போத்தீஸ் என்று எல்லா பக்கமும் சுற்றி திரிந்தாச்சு.


இந்த சிறு விடுமுறையிலும் ஒருநாள் 'பெண் எழுத்தாளர்கள் சந்திப்பு' என்று 26ந் தேதி 3.30க்கு ஒதுக்கி வைத்தேன். தெரிந்தவர்கள் போக அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் சந்திக்க ஆவலாக இருந்து, துபாயிலிருந்து கிளம்பும் முன்பே கிட்டத்தட்ட 10 பேரை வருகிறேன், முயற்சிக்கிறேன் என்று எழுதவைத்து, ஏற்பாடுகளும் செய்திருந்தேன். சென்னை சேர்ந்த பிறகும் எல்லோரையும் அழைத்துப் பேசி நேரடியாக 'சரி' என்று வாங்கிக் கொண்டேன். நான்கு வலைப்பதிவர்கள், ஒரு கவிதாயினி, மூன்று சமூக ஆர்வலர்கள், மூன்று ஊடக மற்றும் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து வெவ்வேறு துறையில் பெண்களுக்கு உண்டான பிரச்னைகளையும், பெண்ணீயம் பற்றி பேசவும், பலதரப்பட்ட விஷயங்களின் கருத்தாடலாகவும் அமையும் என்று பெரிய பெரிய கற்பனையெல்லாம் செய்து 25ஆம் தேதி நினைவுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்து மறுநாள் சந்திப்புக்குக் காத்திருந்தேன்.


வழி கேட்டு முதல் அழைப்பாக அருணா ஸ்ரீனிவாசன். பிறகு சரியாகக் கண்டுபிடித்து வந்து சேர்ந்ததும் பேசத் துவங்கினோம். கொஞ்ச நேரத்தில் நிர்மலாவும் அவர்களைத் தொடர்ந்து வைகை செல்வியும் வந்து சேர்ந்தார்கள். 'திசைகளின்' தற்போதைய நிலவரம் குறித்து பேசத் தொடங்கி விரைவில் 'திசைகள்' தொடரும் என்ற நல்ல செய்தியோடு, வலைப்பூவில் நடக்கும் விஷயங்களைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் பேசி நொந்து கொண்டோம். வைகை செல்விக்கு வலைப்பூ பற்றி சுருக்கமாக விளக்கினார் நிர்மலா.


அருணா, வலைப்பூ ஆரம்பித்த காலங்களைப் பற்றியும், ஒருங்குறிக்கு முன்னால் வலைப்பூ இருந்த நிலவரம், மறுமொழி மட்டுறுத்துவதற்கு முன்னால் இருந்த நிலைப்பாடு, பயமுறுத்தும்/ அருவெறுப்பூட்டும் மறுமொழிகள் வந்த அனுபவம், தமிழ்மணத்தில் ஒரு பதிவைப் பற்றி புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாத தொழில்நுட்ப சிரமங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். வெளிப்படையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார்கள்.


தமிழ்மணம் தேன்கூடு தளங்கள் எல்லா வலைப்பூவையும் சேகரிக்கும் நிரலிதானே தவிர இதை வெளியிடலாம் வேண்டாம் என்று வடிக்கட்ட முடியாத தொழில்நுட்ப அவலம் இருக்கத்தான் செய்கிறது. Spam filter போல் ஏதாவது செய்ய வேண்டும், அமீரகத்தில் நிறைய வலைத்தளங்கள் சேவை வழங்குனர்களால் 'தடை' செய்யப்படுவது போல் தமிழ்மணமும் தேன்கூடும் தடை செய்ய ஆரம்பித்தால், மக்களும் நமது வலைப்பூவை தடை செய்துவிடுவார்களோ என்று பயந்து ஒழுங்காக எழுத ஆரம்பித்து விடுவார்கள். கருத்துச் சுதந்திரம் என்று கண்டபடி எழுத சுதந்திரம் கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தடிசாக்கில் நான் சொன்னேன். அதே போல் பெண் வலைப்பதிவாளர்கள் புகைப்படம் போட்டால் சில அபாயம் இருப்பதாக அறிந்து நீக்கிவிட்டதையும் சொன்னேன். அதற்கு நிர்மலா 'இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்று. ஆண்கள் அவர்கள் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் சுதந்திரமாக. ஆனால் பெண்கள் படம் போட்டால் கூட பயப்பட வேண்டி இருக்கு' என்று வலையுலக நிலவரத்தைக் குறித்து வேதனைப்பட்டார்கள்.


நிர்மலா, வலைப்பூவை தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்து கடிந்து கொண்டார்கள். தேவையில்லாத குப்பைகளுக்கு நடுவே அவர்கள் எழுதியது வரும் போது இது தேவையா நமக்கு, தமிழ்மணத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போதெல்லாம் வளர்த்துவிட்ட ஏணியை விரட்டியடிக்க மனமில்லை என்று கவலைப்பட்டார்கள். (நிர்மலா முகத்தில் ஓடும் ரேகையை வைத்து அவர்கள் மனம் படித்து, அழைத்து பேசி, என்னைப் போலவே உங்களுக்கும் பெரிய ஏமாற்றம்தானே என்று கேட்டேன். 'அடடா, அப்படியே என் முகம் காட்டிக் கொடுத்துவிட்டதா' என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள்).


வைகை செல்வி, பெண்ணாக ஒரு அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள். பெண் என்பதால் ஏற்படும் அலட்சியத்தையும், இப்போதெல்லாம் நிறைய வாசிக்க எழுத முடியவில்லை, காரணம் வேலைப் பளு என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சுற்றுப்புறச் சூழல் பிரிவில் இருப்பதால் அது தொடர்பான 'வானகமே வையகமே' இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழை எல்லோருக்கும் தந்தார்கள். அது அவர்கள் தொழில் ரீதியான பத்திரிக்கை. நிறைய பேர் வருவார்கள் என்று நிறைய பிரதி எடுத்து வந்திருந்தார்கள்.


நால்வருக்குமே நிறைய பேர் கலந்து கொள்ளாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொருவரையாக அழைத்தேன் யாரும் பதிலளிக்கவில்லை. பொன்ஸ் சாவகாசமாக எடுத்து 'ஹலோ ஜெஸிலாவா, எங்க வீட்டுல உறவினர்களெல்லாம் வந்துவிட்டார்கள், சொல்லனும்னு நினச்சேன்...' என்று இழுத்தார்கள். 'ஆமா, தமிழ்நதி என்னாச்சு' என்றேன். 'அவங்க நேற்றே வரமுடியாதுன்னு என்கிட்ட சொன்னார்கள் நான்தான் சொல்ல மறந்துட்டேன்' என்று அலட்சிய பதில் தந்தார்கள். அழைக்கத்தான் முடியவில்லை ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பியிருக்கலாம் என்று நான் கடிந்து கொண்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன். "பெண்கள் பெரும்பாலும் 'professional'களாக நடந்து கொள்வதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்" என்றார்கள் நிர்மலா.


மதுமிதா சென்னையில் இல்லாததால் மிகுந்த ஆர்வமிருந்தும் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்தியதோடு மட்டுமில்லாமல், சந்திப்பு முடிந்த பிறகும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் விசாரித்தார்கள்.


பொது இடத்தில் கூட்டம் வைக்காததும், நிறைய 'அஜெண்டா' வைத்திருந்ததும்தான் பெரும்பாலானவர்கள் வரத் தவறியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 'ரொம்ப சீரியஸான கூட்டம் போல' என்று பலரும் நினைத்திருக்கலாம். இதற்காகவா அவ்வளவு தூரம் போக வேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். பெண்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாக வருவார்கள் என்றெல்லாம் பெரிதாகக் கற்பனை செய்தது என் தவறுதான். எழுத்தாளர்கள், பதிவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரையும் அவியல் போல அழைத்தது கூட நிறைய பேர் வராமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சிலருக்கு நிஜமாகவே காரணங்கள் இருந்திருக்கலாம் எது எப்படியோ வரமுடியாததை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிர்பார்ப்பால் 'பெரிய' ஏமாற்றம் இருந்திருக்காது.


இந்த கெட்ட அனுபவத்தால் அடுத்த முறை கண்டிப்பாக எல்லா பதிவர்களையும் சந்திப்பது என்று முடிவுசெய்துவிட்டேன். பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி