Thursday, June 28, 2007

நாலிரெண்டு எட்டு


எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன தனியா அதற்கு ஆளா வைக்க முடியும்னு முணுமுணுக்கிறது புரியுது). அதனாலேயே இந்த எட்டு சமாச்சாரம் வேண்டாமென்று எட்டு பட்டிக்கும் முன் கூட்டியே அறிவிச்சிருக்கணும். ஆனா யார் நம்மளைக் கூப்பிட போறாங்கன்னு அலட்சியமா இருந்துட்டேன். துபாயோரமிருக்கும் அய்யனார் அரிவாளோடு நிற்கிறார் எழுத சொல்லி. நம்ம ப்ரசன்னா அன்போடு அழைச்சிட்டார். அதெல்லாம் போதாதுன்னு நம்ம நிலவு நண்பன் மாட்டிவிட்டுடேன்னு சந்தோஷப்படுகிறார். அதற்காகவேதான் இந்த பதிவு. அப்புறம் எட்டு மணி நேரம் யோசிச்சாலும் ஒண்ணுமே எழுத தோணலை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்? எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? அதற்கு பதிலா ஒரு 'விட்டு' சொல்லுங்கன்னா சொல்லியிருந்தா சந்தோஷமா ஒரு பிட்டு போட்டிருப்பேன். 'திட்டு'ன்னு 'குட்டு'ன்னு சொல்லியிருந்தாலும் லட்டு சாப்பிடுவது மாதிரி உடனே செஞ்சிருப்பேன். சரி உங்க ஆசையை கெடுக்க வேணாம்னு என் பெருமைக்குரிய விஷயங்களை சொல்லிடுறேன்.

* நான் பிறந்ததே சாதனைதான். மூன்று பெண்களைப் பெற்ற பிறகு, நாலாவதா ஆணாக பிறப்பேன்னு எதிர்பார்த்து பெண்ணாக பிறந்தது முதல் சாதனை.

* பத்திரிகையாளரின் மகள் என்பதால் சுலபமாக எல்லா பத்திரிகையிலும் சின்ன வயதிலிருந்தே என் முகம் வந்திருந்தாலும் அதனை பெரிய சாதனையாக வெட்டி எடுத்து வைத்துக் கொண்டதுகூட இல்லாத நான், ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது வாங்கிய செய்தியோடு கூடிய படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் என் பள்ளியின் பெயர் போட்டு வந்தது, நான் படித்த சாதாரண அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கே பெருமை சேர்த்த விஷயமாக அமைந்ததால் பெருத்த மகிழ்ச்சியளித்தது.

* பதிவு எழுதுவது சாதனைன்னு சொல்லிக்க மாட்டேன், ஏன்னா எல்லா டாம் டிக் & ஹாரி செய்யும் சமாச்சாரமாப் போச்சு. ஆனா பக்கத்து விட்டுல ஞாநியையும், கலைமாமணி கவிஞர் அவினாசிமணியையும், மேல் வீட்டில் கலைமாமணி கவிஞர் மணிமொழியையும், எதிர் வீட்டில் எழுத்தாளர் நாகைதர்மரையும், அதே குடியிருப்பில் மு. மேத்தாவையும், பல பெரிய பத்திரிகையாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் பக்கத்திலிருந்து வளர்ந்த எனக்கு அப்ப எழுதணும், ஏதேனும் அவர்களிடமெல்லாம் கத்துக்கணும், தெரிந்து கொள்ளணும் என்ற ஆர்வம் கூட உதிக்காத எனக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லியிருப்பது போல் 'பள்ளிப் பருவத்திலே எழுத்தில் துளிர்விட்டுடேன்' என்றெல்லாம் சொல்லிக்க முடியாத எனக்கு, சாதாரண கதைப்புத்தகத்தையும் ஜனரஞ்சகப் புத்தகத்தையும் கூட "படிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியவங்க படிக்கிறது"ன்னு ஒடுக்கப்பட்டு, வாசிப்பனுபவமே இல்லாமல் வளர்ந்த எனக்கு, துபாய் வந்த பிறகு தமிழை விட்டு தூரம் போய்விடக் கூடாது என்ற ஞானோதயம் மிளிர்ந்தது போல் பற்றிப்பிடிப்பதற்காகவே திடீரென எழுதத் தோன்றி எழுதி, அதை நாலு பேர் படிக்கிறாங்க என்றால் என்னை நானே மெச்சிக்க வேண்டியதுதான்.

* எட்டுப் போடாமலே ஓட்டுனர் உரிமம் எடுத்தேன். எப்படின்னு கேட்கிறீங்களா உரிமம் எடுத்தது மோட்டார் காருக்கு. அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்த காலகட்டத்தில் முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும். எத்தனையோ பேருக்கு நடப்பதற்கு செருப்பு கூட இல்லாமல் இருக்கும் போது காரில் பறப்பது பெருமையா இல்லையா?

* துபாயில் நல்ல வேலை கிடைப்பதே கடினம், கிடைத்தாலும் வேலை பிடித்திருக்க வேண்டும், வேலை பிடித்திருந்தாலும் நாளில் முக்கால்வாசி நேரத்தைச் செலவளிக்கும் அலுவலகத்தில் நம்மைச் சுற்றி நல்ல மக்கள் அமைய வேண்டும். இது இரண்டுமிருந்தாலும் தேவையான சம்பளம் கிடைக்க வேண்டும். சம்பளம் நிர்ணயித்தாலும் சொன்னபடி சொன்ன தேதியில் கைக்கு கிடைக்க வேண்டும்- இப்படி பல பிரச்சனைகளோடு இருப்பவர்கள் மத்தியில் எனக்கு நிறைவான வேலை, பிடித்தமான சக ஊழியர்கள் என்பது நம்பிக்கையூட்டும் பெருமிதம்.

* நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? குழந்தையில்லாம எத்தனையோ பேர் இருக்க அந்த வரம் கிடைத்தது பெரிய பாக்கியமில்லையா?

* என்னால் பேச முடியும், கேட்க முடியும், பார்க்க முடியும், நடக்க முடியும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். இதெல்லாமும் சந்தோஷப்படும் விஷயம்தானே, எத்தனையோ பேருக்கு அந்த கொடுப்பினைகள் கூட இல்லாத போது? அப்புறம் மற்றவரைப் பற்றி குறை சொல்வதோ, புறம் பேசுவதோ அறவே பிடிக்காத விஷயம் எனக்கு. நாம முதல்ல ஒழுங்கா இருக்க வேண்டாமா மற்றவரை கை காட்டுவதற்கு முன்பு?

* கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது.

தெரியாத்தனமா இவளை எட்டுப் போட அழைச்சிட்டு இப்படி கேவலமா ரம்பம் போட்டிருக்காளே, தேவையான்னு உங்க தலையில நீங்களே அடிச்சிக்கிட்டு சிரமப்படாதீங்க. அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்.

விதிகளில் ஒன்று என்பதால் விளையாட்டின் விதிகளைப் போட்டாச்சு:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும

தொடர்ந்து எட்டுப் பேரை அழைத்து நட்பு வட்டத்தை எட்டுக்குள் சுருக்க முடியாதுப்பா. அதனால் கண்டிப்பாக இந்த தொடர் பதிவில் பங்கேற்கவே மாட்டார்கள் என்று நான் நினைக்கும் ஒரு எட்டுப் பேரை குறிப்பிடுகிறேன், இவர்கள் எனக்காக எட்டுப் போட்டாலே பெரிய சாதனைதான்.

1. அப்துல் ஜப்பார் ஐயா
2. இராம. கி. ஐயா
3. மாலன்
4. பாமரன்
5. யுகபாரதி
6. பெயரிலி
7. இசாக்
8. கவிமதி

Monday, June 25, 2007

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, உணர்ந்தத அப்படியே எழுத்தில் கொண்டுவருவது எனக்கு சுலபமான விஷயமில்ல. முயற்சியின் முதல் படியா இந்த பதிவு.

துபாய் சுற்றுலாவில் மிக முக்கியமான ஒன்றான, இது இல்லாமல் சுற்றுலாவே நிறைவு பெறாதுன்னு சொல்லக் கூடியது. அதுதாங்க Desert Safari -தமிழில் இனிதான் பெயர் வைக்கணுமா அல்லது பெயர் இருக்கான்னு தெரியல. நம் நாட்டுலயும் ராஜஸ்தான்ல இது இருக்கு ஆனா இந்த அளவுக்கு இருக்குமான்னு அனுபவிச்சவங்கதான் சொல்ல முடியும்.

அரை நாள் முழுக்க ஒதுக்கிட்டா போதும் அந்த புது உலகத்திற்கு போயிட்டு வந்திடலாம். துபாயிலிருந்து அப்படியே அந்த தங்க மணற் குன்றுக்கு கூட்டிட்டுப் போவாங்க. எத்தனையோ முறை போயிருந்தாலும், இந்த முறை என் கணவருடைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்ததால் கிட்டத்தட்ட 200 பேர் 30 டயோட்டா லாண்ட் கிரூஸரில் -4WD போனது ஒரு புது அனுபவமா இருந்துச்சு. அலுவலகத்தில் எல்லோரும் கூடி, அங்கிருந்து ஒரு 45 நிமிடத்தில் அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். அங்கதான் தொடங்கியது இந்த மணற் குன்றை நொறுங்கடிக்கும் வேலை (dune bashing).
குதூகலம் ஆரம்பமாகி வண்டி மேலும் கீழும் உருளத் தொடங்கியது. ஏற்ற இறக்கத்தினால் ரோலர் கோஸ்டரில் போவது போல் இருந்தது. வண்டி தடம் புரண்டிடுமோன்னு நினைக்கும் அளவுக்கு வண்டியின் சக்கரம் மணலில் குத்திக்கிட்டு சாயும்படி நின்றது. மணல் வாரி வாரி இறைத்தது. இந்த மாதிரி ஒரு 25 நிமிஷம். அப்புறம் சரியா சூரியன் மறையும் நேரத்தில் அந்த அழகிய காட்சியைப் பார்க்க வண்டியை நிறுத்தினாங்க. நம்ம ஆட்கள் அதை ரசித்தார்களோ இல்லையோ மணலில் சறுக்கி சறுக்கி விழுந்துக்கிட்டு நம்ம வலையுலகம் மாதிரி ஒருவர் காலை மற்றவர் இழுத்துவிட்டுக்கிட்டு விழுபவர்களை இரசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

அதன் பிறகு கூடாரத்திற்கு அழைச்சுக்கிட்டு போனாங்க அங்க ஒட்டகச்சவாரி இருந்தது. ஆளாளுக்கு ஏறி சவாரி செஞ்சாங்க பாவம் ஒட்டகத்திற்கு நாளைக்கு முதுகு வலி வரப் போகுதுன்னு நாங்கள்லாம் பரிதாபப்பட்டாலும் நாங்களும் ஏறிக் கொண்டோம். இரண்டு ஒட்டகம் ஒன்றன் பின் ஒன்றாக, முன் நடக்கும் ஒட்டகத்தின் மீது நாங்கள் ஏறிக் கொண்டோம். அந்த ஒட்டகத்தின் முன்புறம் என் மகளையும் பின்புறம் என் அக்காவின் மகளையும் உட்கார வைத்துவிட்டு நடுவில் நான் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். பின்னாடி நடந்து வந்த ஒட்டகம் எழும்பும் போது திடீரென்று எங்கள் காதுக்கு அருகில் வந்து கத்தியது. அதைக் கேட்டு பயந்து நாங்க ஒரு கத்துக் கத்த, பயங்காட்ட நினைத்த ஒட்டகம் பயந்து போய் வாயை மூடிக் கொண்டது. வேகமாக இரண்டும் நடக்க ஆரம்பித்து ஒரு வழியாக சவாரி முடிந்தது. சவாரியை விட ஒட்டகத்திலிருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் 'ஜெயிண்ட் வீலில்' மேலிருந்து இறங்கும் போது வயிற்றில் பயத்தில் ஒரு பிசை பிசையுமே அதே உணர்வு.

அங்கிருந்து நகர்ந்து வரும் போதுதான் ஒரு கூட்டமே 'பைக் ரைடு'க்காக வரிசையாக நின்றிருந்தார்கள். கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தோம். ஆண்- பெண்ணுக்கென்று தனி வரிசையெல்லாமில்லை காரணம் என்னைத் தவிர வேறு பெண்கள் பைக்கை ஓட்டவே முன்வரவில்லை அதனால் போன கொஞ்ச நேரத்தில் எனக்கு பைக்கை தந்துவிட்டார்கள். கிளப்பிக் கொண்டு பறந்தேன். 'ரொம்ப தூரம் போக வேண்டாமெ'ன்று எச்சரிக்கை. எங்கிருந்து போவது? அடுத்த பக்கத்தில் ஒட்டகம் முறைத்துக் கொண்டிருந்தது. அதனால் சின்னச் சின்ன வட்டமாக மணற்குன்றில் ஏறி ஏறி ஆசை தீர ஓட்டி காத்திருப்பவர்களை கருத்தில் கொண்டு வந்து சேர்ந்தேன்.

அப்புறம் படங்களெல்லாம் எடுத்துக் கொண்டு ஓய்ந்து உள்நுழைந்தால் அங்கே சின்ன சின்ன கடைகள் இருந்தன, அதில் எல்லாம் துபாயிலிருந்து போகும் சுற்றுலா பயணிகள் நினைவிற்காக வாங்கிக் கொள்ளும் பரிசு பொருட்கள் நிரம்பி இருந்தது. நிறைய கூட்டத்தை பார்த்ததும் கடைக்காரர்களுக்கு நல்ல வியாபாரம் இன்று என்று மகிழ்ச்சி. ஆனா ஒருவரும் அந்தப் பக்கம் வேடிக்கைப் பார்க்கக் கூட ஒதுங்காததால் சீக்கிரமே கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ன்னொரு பக்கம் பார்பிக்கியூ (barbeque/barbecue) இரவு உணவுக்காக மணந்து கொண்டிருந்தது. அப்புறம் அரபி கலாச்சாரப்படி காப்பியும் பேரிச்சம்பழமும் சாண்ட்விச்சுகளும் இருந்தது. அதையெல்லாம் தின்று கொண்டே மருதாணிக்கு கையை நீட்டினோம். அங்கே அரபி கலாச்சார உடைகளும் வைக்கப்பட்டிருந்தன, அதை அணிந்துக் கொண்டு பயம் காட்டினர் சிலர் ஆனால் வேஷம் நல்லாயிருக்கவே அனைவரும் படமெடுத்துக் கொண்டோம். ஒருவர் கையில் அமீரகத் தேசியப் பறவையான வல்லூறை வைத்துக் கொண்டு திரிந்தார், பார்க்க அழகாக இருந்ததாலும் எனக்கு பிடித்தமான பறவையென்பதால் தொட்டு மகிழ்ந்தோம். படமெடுக்க ஆயுத்தமாகும் முன்பு, வேறு ஒருவர் வல்லூறை படமெடுக்க, வல்லூறு காப்பாளர் ஒரு படத்திற்கு 10 திர்ஹம் (ரூ.120) என்று கேட்டார். 'என் பெட்டியில் நான் படமெடுக்க ஏன் காசு தரவேண்டும்' என்று எடுத்தவர் சண்டைக்கு நின்றார். எடுத்தது என் பறவையை என்று சொல்லவே வேறு வழியில்லாமல் காசு கொடுத்துவிட்டு, 'தெரிந்திருந்தால் வெறும் பறவையை எடுத்ததற்கு பதிலாக நான் நின்று எடுத்துக் கொண்டிருப்பேன்' என்று புலம்பிக் கொண்டே சென்றுவிட்டார். அப்புறம் சில விளையாட்டுகள் வைத்தார்கள், இரசிக்கும் படியாக இல்லை.

பிறகு பலமான, சுவையான சாப்பாடு. ஒரு வெட்டு வெட்டி விட்டு உட்கார்ந்த போது தென்றலா புயலான்னு தெரியலை வேகமாக வந்து நடமாடினாள் அந்த அழகு பதுமை அரைகுறை ஆடையில். வேகமாகச் சுழன்று தொடர்ந்து அரை மணி நேரம் ஆடினாள். மூச்சிரைக்காமல், முகம் வாடாமல், பார்ப்பவர்களை கட்டிப் போடச் செய்யும் ஆட்டம். அதைப் பார்ப்பவர்களும் தங்களை அறியாமல் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்கு 'பெல்லி டான்ஸ்' என்று பெயர். ஆடியதெல்லாம் வார்தையில்லாத இசைக்கும் அரபிய பாடல்களுக்கும். நான் ஆட்டைத்தை பார்த்ததை விட மற்றவர்கள் ஆட்டத்தை எப்படி இரசிக்கிறார்கள் என்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததுதான் அதிகம். ஆட்டம் முடிந்து அவள் உள்ளே சென்று விட்டாலும் அதைத் தொடர்ந்து 'பல்லே லக்கா..' சிவாஜியிலிருந்து தமிழ் பாட்டு ஒலிக்கவே ஆட துடித்துக் கொண்டிருந்த ஆட்கள் கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் எழுந்து வண்டிக்கு போய்விட்டோம், வீட்டுக்கு வரும் போது இரவு 11 ஆகிவிட்டது. மறுநாள் அலுவலகமென்றதும் எல்லோருடைய முகமும் வாடிவிட்டது. இருப்பினும் மன இறுக்கம் அகற்ற வார இறுதியில் இப்படி ஒரு தப்பித்தல் தேவையென்றே தோன்றியது.

Tuesday, June 19, 2007

சக பயணிகள்


எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். 'விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்' மேடையில் ஜெஸிலா அறிவித்தார். - அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை.
------------------------
விரகம் எழுப்பிய இரவுகளில்
மூடிய அறையின்
மெட்டியொலியும்
சக தோழியின் கடைசி மழலையின்
அழும் குரலும்
மறுநாள் வரை மண்டைக்குள் குடைந்து
உள்ளங்கை வியர்வைக்குள்
எண்ணங்களை அசைப் போட்டு
பயணச்சீட்டை கசக்கும்
நம்பிக்கையற்ற முப்பது

தாய்மைப் பெற தவமிருந்து
வரம் கிடைக்காமல் போனதற்கு
காரணம் இவள் இல்லை
என்று சான்று தந்தும்
இவள் இளமையையெல்லாம்
அள்ளித் தின்ற பிறகு
இவளை ஒதுக்கி வைத்து
அவன் புது மாப்பிள்ளையாகிப் போனான்
புது பொண்டாட்டியும்
'மலடி'யென இவளைப் போலவே
பெயரெடுப்பாளென
ஏளனச் சிரிப்பில் வேடிக்கை பார்த்தாலும்
பயண மிகுதியில் விட்டுச் சென்ற
ஒற்றைச் செருப்பாய் தன்னை உணரும்
ஓடாய் தேய்ந்தவள்

ஓடிப் போன கணவன் தந்த
ஒற்றைப் பிள்ளையை வீதியில் விட்டு
தனக்கென வாழ்வதற்காக
புது தாம்பத்தியத்தில் காலூன்றாமல்
பிள்ளை வளர்ப்பில்
அகம் மகிழ்ந்து
அவனுக்காக
தொண்டைக்குழியில் ஈரம் வற்ற
காய்கறிகளைக் கூவி விற்று
பிள்ளையின் எதிர்காலத்திற்காக
தமது நிகழ்காலத்தை மறக்கும்
கண்ணியத் தாய்

சீழ் வடியும் புண்ணில்
ஈபோல மொய்க்கும்
பணியிடத்து நிர்வாகிகள்
வறுமையை
உடுத்தும் ஆடையிலும்
எதிர்பார்க்கும்
சபலப் பார்வைகள்
சல்லடையாய் உடம்பை துளைக்கும்
நகைச்சுவை என்ற பெயரில்
கேட்கவே கூசும் சொற்களையும்
செவிமடுத்து வெளிவந்தால்.
பேருந்திலும்
கூடையிலிருந்து விழும் தக்காளி போல
மேலே விழுந்து உரசும்
பயண மன்மதன்களின்
நசுக்கல்கள்
வேறு வழியில்லாமல்
வலியோடு
இவற்றை
தாங்கிக் கொள்ளும்
பொறுமைசாலி-

கொட்டிக் கொடுத்து
கரை சேர்த்து
வாழும் முன்னே
வண்ணமிழந்து
மூளியாக முடக்கி விட்டு
'கைம்பெண்' என்றெழுதி
பொட்டு வைத்துக் கொண்டு
துருப்பிடித்த பிடிமானமும் தராமல்
அமங்கலியென ஒதுக்கி வைக்கப்படும்
சமூகக் கட்டுக்குள் அடைபட்டவள்-

ஒரே இடத்தில் நின்று
சிறகடித்துச் சுழலும்
மின்விசிறியைப் போல
கருவுற்ற களிப்பையும்
மனதில் அடக்கி
பக்குவமாக இருந்து
மாதங்கள் பல சுமந்து
பெற்றெடுத்தாள்
கண்ணிலும் காட்டாமல்
கள்ளிப் பாலுக்கு
கருகத் தந்த பெண்சிசுவை
கண்ணுக்குள்ளே வைத்து
கன்னங்களைக் கண்ணீரால்
தினம் கழுவி
மனதை கல்லாக்கி
கணவன் வீடு திரும்பும்
கதியற்ற மருமகள்

வீட்டு வேலை செய்வதற்கும்
படுக்கையில் வேசியாய் இருப்பதற்கும்
வரதட்சணையில் வெந்து வதங்குபவளை
பேருந்திலும் தன் முன்
உட்கார அனுமதிக்காமல்
மருமகளின் கால் கடுப்பில் இன்புறும்
முன்னால் மருமகளான
இந்நாள் மாமியார்

பெண்ணியவாதம்
பெண் விடுதலை
இந்த வார்த்தைகளையெல்லாம்
விசித்திரமாகப் பார்த்து
தங்கள் முகத்திரைகளை எடுக்கவும்
பழகிய வட்டத்திலிருந்து வெளிவரவும்
தயங்கும்
பல்முகம் கொண்ட
இதுபோன்ற பெண்கள்தான்
பெரும்பாலும்
பேருந்தில் மட்டுமின்றி
சமூகத்திலும்
என் சக பயணிகள்!

Tuesday, June 12, 2007

உண்மையான சூப்பர் ஸ்டார்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி 'நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்'னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் பார்க்கிறோம். ஆனா சிலர் இருக்காங்க ரொம்ப நேர்மையா தன்னோட வேலை நேரத்துல சொந்த தேவைக்கு இடம் தரக் கூடாதுன்னு செல்பேசியக் கூட வேலைக்கு எடுத்துப் போக மாட்டாங்க. இப்படியும் இருப்பாங்களான்னு யோசிப்பிங்க, இருக்காங்களே இங்க துபாய் மாநகராட்சியில பணியாற்றும் ஒருத்தர் செல்பேசியக் கூட பணி நேரத்தில உபயோகிக்க மாட்டாராம். வீட்டுக்கு அழைச்சி பேசுறதுக்கு வெள்ளிக்கிழமையில மட்டும் உபயோகிப்பாராம். இவர பத்தி 'கல்ஃப் நியூஸ்'ல படிக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 27 வருஷமா துபாயை அழகாக்க, பராமரிக்க துபாய் நகராட்சியில தோட்டக்காரர உழைச்சிக் கொட்டியிருக்காரு. இந்த 27 வருஷத்துல ஒரு நாள் கூட உடல்நில சரியில்லன்னு விடுப்பெடுத்ததில்லையாம். சின்ன வயசு ஆரோக்கியமான ஆளு அதான்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல இவருக்கு 63 வயசு, பெயர் நசீர், பாகிஸ்தானி.

அந்த செய்தியில இவரப் பத்தி மட்டுமல்ல இவர மாதிரி அடிமட்டப் பணியாட்களப் பற்றி பத்தி பத்தியா போட்டிருந்தாங்க.

துபாய்ல ரொம்ப சங்கடமான விஷயமே போக்குவரத்து நெரிசல்தான் அந்த நெரிசலிலும் சந்தோஷமா வண்டி ஓட்டுறேன்னு ஒரு 'துபாய்
டிரான்ஸ்போர்ட்'ல வேல பார்க்கும் 'ஏமானி' அஹமது சாலே (45) சொன்னா அவரும் பாராட்டுக்குரியவர்தானே? அதுவும் வெய்யில் நேரத்துல வெளியில் போகவே யோசிப்போம், இவரு அந்த மாதிரி வெய்யில டாக்ஸிக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. நல்ல மனசுக்கு சொந்தக்காரர்.

அப்புறம் இன்னொரு ஒருத்தர் என் மனதை தொட்டவர் -இரு கண்ணுமில்லன்னு துவண்டுப் போய்டாம, தன்னம்பிக்கை மிக்க பெண்ணான நஜீபா அமீரக பல்கலைகழகத்திலேயே பட்டப்படிப்பு முடிச்சவங்க. விஞ்ஞான மூலபொருள 'ப்ரெய்ல' மாத்தி படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு
சொல்றாங்க. இவங்க அரசாங்க உத்தியாகத்தில இருக்கிறாங்கன்னா பெருமைக்குரிய விஷயம்தான். அதுவும் 'நுழைமதி' தரும் பகுதியில வேலை. இவங்க அங்க என்ன செய்றாங்கன்னா பாஸ்போர்ட் விவரத்தை கணிணில பார்-கோர்ட் மூலமா வருடி சேகரிப்பதுதான் இவங்க பணி.

சரி இவங்கள பத்தியெல்லாம் ஏன் பத்திரிகையில எழுதினாங்கன்னு நீங்க கேட்கலாம், 'Dubai Government Excellence Programme awards'
நிகழ்ச்சியில துபாய் அரசாங்கம், எந்தெந்த அரசாங்க பிரிவு சிறப்பான சேவை செஞ்சிருக்குன்னு பார்த்து விருது வழங்கினாங்க. அதில இரவு முழுக்க விழிச்சிருந்து மக்களுக்கு பாதுகாப்பு தருகிற துபாய் போலீசுக்கு, துபாய் செய்தி நிறுவனமான 'எமிரேட்ஸ் நியூஸ்'னு 11 அரசாங்க பிரிவுக்கு விருது கிடச்சது. இதுல ஒவ்வொரு பிரிவில ரொம்ப சிறப்பா வேலை பார்க்கிற அடிமட்ட பணியாளார்கள்னு 'பல மரத்தக் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டானு' இல்லாம தன் வேலைய எவ்வளவு சிறப்பா முடியுமோ அவ்வளவு சிறப்பா தன்னையே அர்ப்பணிச்சி தனித்தன்மையோடு வேலை செய்றவங்கள 25 பேரை கண்டுபுடிச்சி The unsung heroesன்னு ஒரு பிரிவுல தேர்ந்தெடுத்து வருடா வருடம் விருது தராங்க. பாடுபடுறவங்கள பத்தி யாரும் பாடுறதில்லன்னு இந்த விருதுக்கு இப்படி பேரு போல. விருது கிடைச்ச ஒவ்வொருத்தரும் சேர்ந்தா மாதிரி சொல்லியிருக்கிற விஷயம் அமீரகத்துடைய பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்துமுடைய கையால் பரிசு வாங்கி பக்கத்தில் நின்னு படம் எடுப்போம்னு கனவுலக் கூட நெனச்சதில்லன்னு சொல்றாங்க.
பார்த்தீங்கன்னா எல்லோரும் அவங்களுக்காக பாடுபடல தங்கள சார்ந்தவங்கள, குடும்பத்த, பெத்த பிள்ளைகள நல்ல நிலைக்கு கொண்டுவரத்தான் மெழுகுவர்த்தியா உருகுறாங்க. விருதுன்னா சும்மா சான்றிதழ், பாராட்டு மட்டுமல்ல பதவி உயர்வும், திர்ஹம் 50,000 (நம்ம இந்திய ரூபாயில் 6 லட்சம்) பரிசு. அப்படி தன் சேவையைக் கொட்டி வேலைக்குன்னு தன்ன அர்ப்பணச்சிக்கிட்டு தனித்துவம் படைச்ச அந்த சிறப்புக்குரிய 25 பேருல மூணு பேரப்பத்திதான் மேல சொல்லியிருக்கேன். அமாவாசச் சோறு என்றைக்குமா அகப்படும்? எப்பவாவது இப்படி படிக்கும் போது தன்னம்பிக்கை ரொம்ப பொங்கி வரா மாதிரி இருக்கும் அதான் உங்களுக்கும்
பொங்கட்டும்னு எழுதி வச்சேன்.

இந்தச் செய்திய வாசிக்கும் போது நான் இங்க வந்த புதுசுல கேள்விப்பட்ட, அதாவது 10 வருஷத்திற்கு முன்னாடி நடந்த விஷயம் நினைவுக்கு வந்துச்சு. அப்போ உயர்திரு ஷேக் மக்தும் பின் ராஷித் அல் மக்தும் ஆட்சிக் காலத்தில் கண்ணெதிரே சிறப்பான வேலை செஞ்சு பார்த்த ஒரு வயதான தோட்ட வேலையாளுக்கு உடனே சந்தோஷத்துல திர்ஹம் 1 லட்சம் (ரூ. 12 லட்சம்) காசோலை தந்தாராம். ஒரு நாளாச்சாம் இரண்டு நாளாச்சாம் அந்த காசோலை வங்கில மாற்றலையாம். சரி இருக்கட்டும் பார்க்கலாம்னு விட்டார்களாம், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த காசோலை வங்கிக்கு பணமாக்க வரவில்லையாம், சரி என்ன விஷயம்னு கேட்போம்னு கேட்டா அந்த உழைப்பாளி சொல்லியிருக்காரு "ஐயா அன்பா கையெழுத்துப் போட்டு தந்தத மாத்த மனசில்ல, சட்டம் போட்டு வீட்டு சுவத்துல மாட்டிவச்சிருக்கேன்னு". அப்புறம் கேள்விப்பட்டவங்க அந்த காசோலைய அப்படியே வச்சிக்கோங்க நாங்க வேறு காசோலை தந்து மாத்தியே தந்திடுறோம்னு பணம் கொடுத்தாங்களாம். இப்படியும் மனுஷங்கள பார்த்திருக்கீங்களா? இது அறியாமையில்ல, பேதைத்தனமில்ல பணம் காசவிட அன்பு பாசத்திற்கு முக்கியதுவம் தந்திருக்காரு, தன் தேவையையும் மறந்து.

'நானும்தான் என்னையே வேலைக்குன்னு சமர்ப்பிச்சுக்கிட்டேன் ஆனா என்னத்த கண்டேன்'னு சலிச்சிக்காம பொறுத்தார் பூமி ஆள்வார், நீங்க போட்டது கண்டிப்பா முளைக்கும்னு தன்நம்பிக்கையில உழைச்சாலே போதும். நீங்களும் ஒருநாள் பாடப்படுவீங்க.

Thursday, June 07, 2007

படம் காட்டுறோம் படம்!

சிக்குபுக்கு இரயிலு 1895



நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940



சீருந்து காட்சியகம் - சென்னை 1913


ஃபோர்ட் நிறுவனம் 1917


கொல்கத்தா 1915


அந்தமான் 1917


மத்ராஸ் வங்கி 1935


கராச்சி பல்சுவை அங்காடி 1917


கராச்சி திரையரங்கம் 1917


நம்மூரு கொத்தவாச்சாவடி 1939


லாஹூர் 1864


சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!


சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்கு


பரப்பரப்பில்லாத மும்பாய் 1894


விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894


மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939


உறவில்லாத உதகை 1905


மின்சார உற்பத்தி தொழிற்சாலை 1917 (Power Plant)


தான் வேட்டையாடிய சிறுத்தை மீது சிரத்தையாக உட்கார்ந்திருக்கும் இந்திய வீர திருமகள்- 1920


நம்மவர்கள் அடிமையாக இருந்த காலத்தில் ;-(


மன்னர் அவையில் ஆடும் நாட்டிய மங்கைகள் 1830


தில்லி பாராளுமன்றம் (கட்டிட கலைஞர் எட்வின் லுட்யன்ஸ் & ஹெர்பெட் பேக்கர் வடிவமைத்ததாம்)


1910-லேயே மும்பாய் பெண்கள் விருந்து வைபவத்தில் பங்கேற்று குதூகலிக்கிறார்கள்.


ஷாஜகான் 1650-58ல் கட்டிய ஜுமா மஸ்ஜித், தில்லி


இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் 'ஹன்னு', ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பும் காட்சி


இந்திய வீர திருமகள் படத்திலிருந்து கீழ் உள்ள அனைத்து படங்களும் 'India Then and Now' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள். அன்றைய இந்தியா பற்றி ருத்ரங்ஷூ முகர்ஜியும், இன்றைய இந்தியாவைப் பற்றி விர் சங்வியும் எழுதியுள்ளனர்.

Tuesday, June 05, 2007

வேற்று திசை - சிறுகதை

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.

இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை அதன் கண்ணீர் கலந்து வருவதால் கலங்கலாக தண்ணீர் வருகிறதோ என்று உற்றுப் பார்த்து, கலங்கலாக வந்தாலும் பரவாயில்லை புழங்க உதவும் என்று கடைசி சொட்டுவரை விடுவதாக இல்லை என்ற படி அடித்துக் கொண்டிருந்தனர் அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள். ராமசாமி தெருவில் குறுகிய அந்த முடுக்கு சந்தில் இரு பக்கமும் வீடுகள். ஒரே வாயிலுக்குள் நான்கு மாடி-வீடுகள் அதில் ஏழு குடித்தனங்கள் அதில் வீட்டுச் சொந்தக்காரர் ராஜன் வீடும் அடக்கம். வீட்டின் பெயர்-பலகை 'செம்பருத்தி' என்று காட்டியது.

ராஜனுக்கு அரசாங்க வேலை. அழகான அளவான குடும்பம். மனைவி அன்பான இல்லத்தரசி. மகன் திருலோகச்சந்தர் இந்திய நாட்டின் எல்லையில், ராணுவத்தில் பணி. அவன் விரும்பி எடுத்த வேலை என்பதால் யாரும் மறுக்கவில்லை. மகள் மீனலோச்சனி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றிருந்தவள் விடுமுறைக்கு வந்திருக்கிறாள். அந்த 'செம்பருத்தி'யே அவள் வருகைக்காக காத்திருந்தது. அவள் வந்ததுமே அவளைப் பார்க்க எல்லோரும் வீட்டிற்கு வரிசையாக வந்து போய் இருந்தார்கள். படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அன்பால் இணைத்து அவளைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள். அவள் பெற்றோருக்கு பெருமையாகவே இருந்தது.

ஒருமாதமே விடுமுறையில் வந்திருக்கும் மீனாவுக்கு தன் சிநேகிதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எல்லோரையும் ஒரே சமயத்தில் பார்க்க யாருடைய திருமணமும் ஏற்பாடாகவில்லை. ஆகவே அவள் சிநேகிதியும் சித்தி மகளுமான சுஜாவுக்கு தொலைபேசியில் அழைத்து மணிக்கணக்கில் பேசி சுஜா வீட்டில் எல்லா தோழிகளையும் கூட்டி சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அங்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

"அம்மா குங்குமம் எங்க இருக்கு" மேலே இருந்து படிக்கட்டின் கைப்பிடியை பிடித்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உரக்கக் கத்திக் கேட்டாள், கீழே சமையலறையில் இருக்கும் அம்மாவின் காதில் விழுமாறு.

"இரண்டாவது தட்டுல சாமி படத்துக் கிட்ட, அந்த குத்து விளக்குக்கு பின்னாடி இருக்கு பாரு" அம்மாவும் மீனா காதில் சென்றடையும் வகையில் பதிலளித்தார்.

"அப்பா வாடகை சீருந்துக்கு சொல்லிட்டீங்களா?" மீண்டும் உரக்க..

"ம்ம் சொல்லிட்டேம்மா இன்னும் 5-10 நிமிஷத்துல வந்துடும், நீ கிளம்பிட்டாயா இல்லையா?"

"கிளம்பிக்கிட்டே இருக்கம்பா.."

அமெரிக்கா வரை அனுப்பி வைத்தவர்களுக்கு நீலாங்கரையில் இருக்கும் சுஜா வீட்டிற்கு அனுப்ப தயக்கம். தெரிந்த வாடகை சீருந்து

நிலையத்திலிருந்து வண்டி எடுத்திருந்தார்கள். "தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" என்ற வேண்டுகோளோடு வண்டி ஏற்பாடு.

வண்டி வந்து நின்றது, அமெரிக்காவிலிருந்து வந்த பெண் என்று ஏற்கெனவே சொல்லி அனுப்பப்பட்டிருந்தது.

"போய்ட்டு வரேம்மா, வரேன்பா" என்று சொல்லியபடி, படி இறங்கும் போது புடவை மடிப்புகள் கீழே பிறளாமலிருக்க மேலே தூக்கவும், உயரமான காலணி எட்டிப்பார்த்தது.

"போய் சேர்ந்ததும் கூப்பிடு" என்று கிசுகிசுத்தாள் அம்மா.

"சரிம்மா" என்று தாயின் அன்பைப் புரிந்தவளாக சீருந்தின் பின்கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.

ஓட்டுனர் தமிழரசனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெண் என்று சொன்னதால் அவன் கால்சட்டை, கையில்லாத மேல் சட்டையில் அவளை எதிர்பார்த்ததால் அந்த வியப்பு. தளையத் தளைய சேலை கட்டி, அவள் நீளக் கூந்தலில் வீட்டில் கட்டின அடர்த்தியான மல்லிகையை முன் பக்கம் தெரியும் வகையில் வைத்து, ஒட்டு பொட்டுக்கூட வைக்காமல் குங்குமத்தில் தண்ணீர் விட்டு குழைத்து அதிலிருந்து வரைந்த பொட்டுக்கு கீழ் விபூதியும். தன் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்பட்டு, ஆங்கிலத்தில் கொஞ்சம் தமிழும் கலந்து பேசும் சென்னை கல்லூரி பெண்கள் மத்தியில் இவள் அமெரிக்காவில் படித்தும் 'அம்மா, அப்பா' என்று அழகு தமிழில் அழைத்தது அவன் காதில் விழுந்தால் அவனுக்கு வியப்பாகத்தானே இருக்கும்?!

தமிழரசன், வாலிப வயதிலும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். கற்றது கையளவென்பதால் உலகளவை ஆராய்பவன். அமைதியானவன் ஆனால் ஒத்த ஆர்வமுடையவர்கள், நல்ல இரசனையுடையவர்கள் கிடைத்துவிட்டால் "விடுடா சாமி" என்றாலும் அன்புத் தொல்லையாக மொய்ப்பவன். தமிழ் விரும்பி. லட்சணமான முகவாகுடையவன். காதல் என்றால் காததூரம் ஓடுபவன்.

சீருந்தில் ஏறி, கையசைத்து விட்டு, வண்டி நகரும் போது மீனா மெல்லிய குரலில் தன்மையாக கேட்டாள் "எங்க போகணும்னு உங்களுக்கு தெரியும்ல?"

வியப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக அவள் குரல் காதில் தேனாக பாய்ந்ததால் திடுக்கிட்டு "தெரியும். நீலாங்கரை தானே?" என்றான். தேனாக அவனுக்குப் பாய்ந்ததின் காரணம் அவள் குரல் வளமில்லை மாறாக அவள் தமிழ் பேசியது. இவனை ஓட்டுனராக அனுப்பியது இவன் நல்ல ஆங்கிலமும் பேசுவான் என்ற காரணத்திற்காகவும்தான்.

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும் மீனாவுக்கு சென்னை புதியதாகத் தோன்றியது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

"குளிர்மி வேண்டாமே, நான் இயற்கை காத்து வாங்கிக்கிறேன்" என்றபடி கண்ணாடியை இறக்கிக் கொண்டாள்.

மீண்டும் அதிசயப் பொருளாகவே மீனா தமிழரசுக்குத் தோன்றினாள். "வண்டில ஏசி வேலை செய்யலையா?" என்று அலுத்துக் கொள்ளும் உள்ளூர் ஆட்களின் குரல் அவனுக்கு எங்கோ ஒலித்து மறைந்தது.

நீலாங்கரை போய் சேரக் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும், அதுவரை வாயை அடக்க முடியாதவனாக மெல்ல பேச்சைத் தொடங்கினான் அரசு.

முன்னால் பார்த்தவாறே வண்டியை கவனமாக ஓட்டியபடி "நீங்க சென்னைக்கு வந்து எவ்வளவு நாளாகுதுங்க?" என்று தொடங்கினான்.

"ம்ம்.. என்ன கேட்டீங்க..?" கண்ணாடி தாழ்த்தி இருந்ததால் காற்றின் இரைச்சலில் சரியாகக் கேட்கவில்லை அதுமட்டுமில்லாமல் அவன் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்த்திராதவளுக்கு காதில் சரியாக விழவில்லை.

"நீங்க அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதா சொன்னாங்க, எத்தனை வருஷம் கழிச்சி சென்னைக்கு வரீங்க" என்று தெளிவாக கேட்டான்.

முன்னால் அவன் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தாலும், அவனைப் பார்த்தபடி பதில் அளித்தாள் "இரண்டரை வருஷமாச்சு. ஆனா பல வருஷமான மாதிரி பல மாற்றங்கள் தெரியுது.." என்று சொல்லிவிட்டு புதிய இடத்தைப் பார்ப்பதுப் போல் கண்கொட்டாமல் வெளியே பார்த்து வந்தாள்.

"ம்ம்.. நிறைய மாற்றங்கள் இருக்கு, புதுப்புது மேம்பாலங்கள், சாலை விரிவுபடுத்தப்பட்டிருக்கு, இரு வழிப்போக்குவரத்து ஒருவழிப் பாதையாகி இருக்கு, மழை நீர் சேகரிப்பால் தண்ணீர் கட்டி நிற்கும் பிரச்சனையில்ல. ஆனா மாறாதது குடிநீர் பிரச்சனைதாங்க" தனக்கு நினைவில் இருந்ததை பட்டியலிட்டான்.

சில நிமிட அமைதிக்கு பிறகு "ஆமா, அமெரிக்கால தமிழ் பேசும் வாய்ப்பு கம்மி இல்ல?..." என்று இழுத்து அவள் பதிலுக்குக் காத்திருந்தான்.

சென்னையை இரசித்துக் கொண்டு வந்தவளுக்கு 'தமிழ்' என்று கேட்டவுடன் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு "யார் சொன்னா? அங்கு நிறைய தமிழர்கள் இருக்காங்க. எங்களுக்கு தமிழ்ச்சங்கமே இருக்கு. உலகெங்கும் மணப்பது தமிழ் மொழி" என்று பெருமிதத்துடன் சொன்னாள்.

மிகழ்ச்சியாக "அடேங்கப்பா, மொழிப் பற்று அதிகம் போல உங்களுக்கு. நீங்க தெரிந்துக் கொள்ள ஒரு விஷயம் சொல்றேன், நான் தமிழில் முதுகலை பட்டதாரி" என்றான் அவனும் பெருமிதத்தோடு.

வியப்பாக அவனைப் பார்த்தாள் மீனா.

போக்குவரத்து விளக்கு சிகப்பு என்று காட்டியவுடன் வண்டியை மெதுவாக நிறுத்தத்திலாக்கினான். வியப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவின் பக்கம் தலை திருப்பி "என்னங்க நம்ப முடியவில்லையா? இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.

நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"

சிரித்துக் கொண்டே கண்களை சாலை விளக்கு பக்கம் திருப்பிக் கொண்டவன் கேட்டான் "ஏங்க வண்டி ஓட்டுனரா வேலை பார்ப்பது கேவலமா..?" அவள் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தான். "என் அப்பாவுக்கு அரசாங்க பணி, அம்மா பள்ளிக்கூட ஆசிரியை, என் அண்ணன் கப்பல் துறையில், அக்கா படிப்பு முடிஞ்சதும் கட்டிக் கொடுத்துட்டோம், அவள் கணவரும் அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியர். பின்ன நான் ஏன் வண்டி ஓட்டுறேன்னா, எனக்கு வாசிக்க எழுத நிறைய நேரம் தேவை. ஓய்வு நேரங்களில் என் சவுகரியத்திற்கு பணம் ஈட்ட நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தற்காலிகப் பணி இது" என்றான் விளக்கமாக.

"ம்ம், உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்று சுருங்க முடித்துக் கொண்டாள்.

"நீங்க எழுதுவீங்களா? கதை, கவிதை இந்த மாதிரி.." என்று ஏதாவது பேசிக் கொண்டிருக்க புதிய தலைப்பைத் தொடங்கினான் வண்டியையும் நகற்றியபடி.

"ம்ம்.. எழுதுவேன்" என்றாள் ஒரே வார்த்தையில்.

"கதையா, கட்டுரையா, கவிதையா? எதை எழுதுவீங்க? எதில் ஆர்வம் அதிகம்?" அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை. எழுதுவேன் என்று சொன்னதும் ஊக்கத்தில் கேள்வியை அடுக்கினான்.

"தோன்றுவதை எழுதுவேன். என் கவிதைகள் சில வார ஏடுகளில், சில மின்னிதழ்களில் வெளிவந்துருக்கு" என்றாள் வெளியில் பார்த்தபடி.

அவளை பேட்டிக் காண்வது போல் தொடர்ந்தான் "எந்த மாதிரியான இதழ்களை படிப்பீர்கள்? வெறும் ஜனரஞ்சகமான இதழ்களா? அல்லது சுபமங்களா, கணையாழி, காலச்சுவடுன்னு கவிதாசரணெல்லாம் படிப்பீர்களா?"

சிற்றிதழ்கள் குறித்தும் அதன் தீவிர இலக்கிய நோக்கங்கள் பற்றியும் கேள்வி மட்டுமே பட்டிருந்தவளுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியை கலைக்க மறுபடியும் "என் தாய்மாமா நீதிபதியா இருக்காரு, அவர்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கும், ஒண்ணையும் விடாம படிப்பேன். கன்னிமரரா நூலகம் தெரியுமா? அதில் நான் ஆயுள்கால உறுப்பினர். அது லேசுப்பட்ட விசயமில்லீங்க அதற்கு எத்தனை பேர் சிபாரிசு செஞ்சி கையெழுத்துப் போட்டாங்க தெரியுமா? அப்புறம்தான் ஆயுள்கால உறுப்பினரா சேர்த்துக்கிட்டாங்க." என்று சொந்தக் கதைகளை அவிழ்த்துவிட்டான். வேகமாக ஓட்டினாலும் நிதானத்தைப் பிடித்திருந்தான்.

அவளைப் பேச வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், "கவிதை எழுதுற நீங்க கவிதைப் புத்தகங்களை வாசிப்பீங்களா?" என்றான் ஒரு கணம் முகம் திருப்பி அவளைப் பார்த்து.

"ம்ம்.. வாசிப்பேன்" என்று உற்சாகமாகப் பதில் வந்தது.

இடதுபக்க சன்னலருகே அமர்ந்திருந்த மீனா இடது பக்கமே பார்த்து வந்துக் கொண்டிருந்தவள் குளிர்ந்த காற்று மேலே தழுவியதும் வலது பக்கம் காற்றின் திசையை நோக்கிப் பார்த்தால், கடற்கரையை கடந்து கொண்டிருந்தது. சீருந்து இந்த அமைதியான கடலா சுனாமியை எழுப்பியது என்று திகைப்பாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வார்த்தையால் அவள் மவுனம் கலைத்தான் அரசு, "யாருடைய கவிதைகள் ரொம்ப பிடிக்கும்?.."

கடற்கரையை இரசித்தபடியே "யார் கவிதையானாலும் அழகானதாக இருந்தால் பிடிக்கும்" என்று வார்த்தைக்கும் வலிக்காத வண்ணம் கூறினாள்.

"சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வாசிச்சிருக்கீங்களா?" கருத்துப்பறிமாற்றத்தை தொடங்கினான்.

"வாசித்திருக்கிறேன்" கடற்கரையை கடந்து விட்டிருந்ததால் மறுபடியும் இடது பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"தேவையில்லாத விரசமான வார்த்தைப் பிரயோகம், ஒரு பெண் அப்படி எழுதி இருப்பது அநாகரிகமா இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?" என்றான் அவன் கருத்தோடு அவள் ஒத்துப் போவாள் என்ற நம்பிக்கையில்.

"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" என்று அழுத்தமாக தன் கருத்தைச் சொன்னாள்.

சிறிதும் அந்த பதிலை எதிர்பாராதவன் கண்கள் விரிந்தன. ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் எந்தக் கலவரமும் இல்லாமல் யதார்த்தமாக சாதாரணமாக மறுபடியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக தடைப்பானை அழுத்தியதில் மீனா முன் பக்கம் வந்து மீண்டும் பின் பக்கம் தள்ளப்பட்டாள். வலது கையை இறுக்கமாக முன் இருக்கையை பற்றியிருந்தாள். என்னவென்பது போல் முன் பக்கம் தலையை தூக்கிப் பார்த்தாள்.

"மன்னிக்கணுங்க. ஒரு பூனை ஓடியது அதுதான்..." என்று சிறிதும் எதிர்பாராது குறுக்கே வந்த பூனைக்காக பதட்டமடைந்து வண்டியை அழுத்தி நிறுத்திய காரணத்தை தயக்கத்துடன் மீனாவிடம் கூறினான்.

இந்தத் திடீர் நிறுத்தம் காரணமாகப் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி சீருந்தில் முட்டி விட்டது. கீழே இறங்கிய அரசு பின் பக்கம் போய் பார்த்தான். லேசான கீறல்,
"ஏன்யா இடைவெளிவிட்டு ஓட்டவேண்டியதுதானே" கையை நீட்டிக் கோபமாக கேட்டான். நியாயமாக அவன் தான் அரசைத் திட்டியிருக்க வேண்டும். வேகமாகச் சென்றவன் எதிர்பாராமல் தனது சீருந்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியது தமிழரசின் தவறுதான், இருப்பினும் முந்திக் கொண்டு அவனைத் திட்டிவிட்டு, மறுபடியும் வண்டிக்குள் ஏறி அமர்ந்தான். மூன்று சக்கர வண்டியின் முன் விளக்கில் பெரிய கீறல், இருந்தும் "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்" என்பதால் மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஒன்றும் சொல்லாமல் முணுமுணுத்தபடியே வண்டியை இறங்கி பின்னால் தள்ளினான். ஆனால் வண்டியில் சவாரி ஒன்றுமில்லை.

வண்டியில் ஏறிய தமிழரசிடம் "ஒண்ணும் ஆகலையே" என்றாள் அக்கறையோடு.

அக்கறையின் ஆனந்தத்தில் மெல்லிய சிரிப்புடன் "ஒண்ணும் ஆகல" என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாகவே வண்டியை ஓட்டி வந்தவனுக்கு மறுபடியும் மீனாவிடம் ஏதாவது கேட்டுப் பேசிக் கொண்டு தொடர வேண்டும் போலிருந்தது.

"தி.ஜா. எழுத்துக்களெல்லாம் படிச்சிருக்கீங்களா?" என்று தொடர்ந்தான்.

"நீலங்கரைக்கு போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?" அவன் கேள்வியை கவனிக்காதது போல் மறு கேள்வி கேட்டாள்.

"இது திருவான்மியூர்.." விளக்க நினைத்தான்.

"தெரியுது, இன்னும் அதிக தூரமில்லையே?" ஏற்கெனவே தெரிந்திருந்ததால் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள்.

"கிட்டதான், வந்திடுச்சு.." என்று கொஞ்சம் வேகத்தைக் கூட்டியபடி கூறினான்.

அவள் 'பட்பட்'டென்று பேசும் சுபாவம் அவனுக்கு பிடித்திருந்தது. அவள் இலக்கிய ஆர்வமும் பிடித்திருந்தது. அவன் பேச்சுக்கு காது கொடுத்ததும் பிடித்திருந்தது. அவள் தமிழ் பேச்சும் பிடித்திருந்தது.

அவன் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் அவள் தெரியும்படி திருப்பி வைத்தான். புதியதாய் ஒரு உணர்வு அவனைப் பற்றிக் கொண்டிருந்தது.

அதைக் கவனிக்காமலேயே அவள் சேலையைச் சரி செய்துக் கொண்டாள். கோவிலைக் கடக்கும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதையெல்லாம் இரசித்துக் கொண்டே வந்தான் தமிழரசு.

"எல்லா வகையான கவிதையும் பிடிக்கும் என்றீர்களே, காதல் கவிதைகள் யாருடையது பிடிக்கும்?" என்று பேச்சை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான்.

அவன் கண்களை பார்க்காமல் வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தாள் "ம்ம்.. குறிப்பிட்டு யாரையும் சொல்லத் தெரியலை, யதார்த்தத்தோடு ஒன்றி எழுதி, மனதைத் தொடும் எல்லா கவிதையும் பிடிக்கும். கவிதையாக படிப்பதைவிட பாட்டில் வரும் கவியரசின் வைர வரிகள், தாமரையின் கவிதை கலந்த பாடல்கள் எல்லாம் பிடிக்கும். பா. விஜயின் கவிதைகள், அறிவுமதி, யுகபாரதி, தபுசங்கர், நா. முத்துக்குமார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்."

"தேவதையின் தேவதைகள் படித்திருக்கிறீர்களா? ரொம்ப திகட்டலா தோன்றவில்லை?" என்றான் முகம் சுளித்தவாறு.

"அப்படியொன்றும் தோன்றவில்லை. அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.

என்ன இரசனையோ என்று சலித்துக் கொண்டவாறு "உரைநடை வீச்சுதானே அதிகம்? கவிதையாக ஒன்றுமே எனக்கு தென்படவில்லை."

"அது என்னவோ உண்மைதான், இருப்பினும் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் இரசிக்கலாமா என்று பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.

நீலாங்கரை நுழைந்ததும் அவள், "அடுத்த தெரு, இடதுப்பக்கம்" என்று வழியைக் கவனமாக பார்த்துக் கொண்டு வந்தாள்.

வண்டி இடதுபக்கம் திரும்பியதும் "மெதுவாப் போங்க.." வீடுகளை கவனித்தபடி தன்மையோடு. "இந்த வீடுதான்" என்று ஒரு புன்முறுவல் வைத்தாள் தோழிகளை காணப் போகும் மகிழ்ச்சியில்.

கதவைத் திறந்து இறங்கிக் கொண்டவள் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு வீட்டை ஒருமுறை மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டு, குனிந்து "போய்ட்டு வரேங்க, உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சிரித்த முகமாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் கதவை அடைத்தாள்.

உள்ளே இருந்து சுஜா வர, அவளை நோக்கி கைகளை விரித்து "சுஜி" என்று கூறி அரவணைத்துக் கொண்டாள்.

தமிழரசன் அவளைப் பிரிய மனமில்லாமல் சீருந்தின் ஒலியெழுப்பியை அழுத்தினான், முக மலர்ச்சியோடு திரும்பிப் பார்த்த மீனா "ம்ம்.." என்றாள் 'என்ன' என்பது போல்.

"சாயங்காலம் எத்தன மணிக்கு வரணும்?" என்று ஆவலாக கேட்டான்.

"நான் கூப்பிடுறேனே.." அவளுக்கே தெரியாது என்பதாலும் இவனுக்கேன் அப்படியொரு அக்கறை என்பது போலவும் பதில் வந்தது.

'சரி'யென்று தலையாட்டி அவளைப் பார்த்தபடியே வண்டியை திருப்பிக் கொண்டு போனவன் மனதில் மாலையின் சந்திப்பை நினைத்து பூரிப்பு. வண்டியில் இருந்து இறங்கினாலும், மனதில் ஏறிக்கொண்டவளை நினைத்துக் கொண்டு வண்டியில் நல்ல பாடல் ஒலிக்க செய்தான்.

உள்ளே வந்த மீனாவின் செல்பேசி ஒலித்தது. "அப்பா, இப்பதான் வந்து சேர்ந்து உள்ளே நுழையிறேன்."

நிம்மதி மூச்சுடன் "சரிம்மா. அப்ப சாயுங்காலம் எத்தன மணிக்கு வண்டி வேணும்னு முன்கூட்டியே சொல்லிடு" என்றார் சொல்லி வைத்தாற்போல.

"நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா... வண்டி எத்தன மணிக்குன்னு சொல்றேன் ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.

"ஏம்மா ஏதாவது பிரச்சனையா" அப்பா உடனே பதறிவிட்டார்.

"அதெல்லாம் இல்லப்பா, ஆனா வேணாம். நீங்க ஒண்ணும் சொல்லிக்காதீங்க, வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" என்றாள் மீனா.

மகளைப் புரிந்துக் கொண்டவனாக "சரிம்மா, வைக்கிறேன்" என்றார் அப்பா.

"சரிப்பா, அப்புறம் அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க" அம்மாவின் மனதை அறிந்துரைத்தாள்.

இணைப்பு துண்டிக்கப்பட்டதும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சுஜா ஆவலாக "ஏண்டி, ஏதாவது பிரச்சனையா?" என்று மறுமுனையில் அப்பா கேட்டதையே கேட்டாள்.

"அதெல்லாம் இல்ல. சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.

சரி இவள பேசவிட்டா அவ்வளவுதான்னு தோழிகள் கூடி இருக்கும் அறைக்குள் மீனாவை இழுத்துச் சென்றாள் சுஜா. அங்கே நுழைந்ததும் மகிழ்ச்சி சூடிக் கொண்டு எக்களிப்பில் திளைத்தனர்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி