Wednesday, February 26, 2014

தவிக்க வைத்த 'நூறு நாற்காலிகள்'

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது.
எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், அப்படியான சூழலை மட்டுமே கடந்து வந்திருக்கிறேன். ஒரு வேளை சென்னையில் வளர்ந்ததால்தான் இப்படியா என்று என் நண்பரிடம் வினவுகையில் 'இல்லை, விபரம் தெரியாமலே வளர்ந்திருப்பாய்' என்றார். இருபது வயது வரை சென்னை காற்றையே சுவாசித்தவளுக்குச் சாதி பாகுபாடு, தீண்டாமை, கீழ் சாதி- மேல் சாதி பிரிவினை, அலட்சியப் பார்வைகள், ஒதுக்கி வைத்தல் போன்ற எதையுமேவா நான் சந்தித்ததில்லை? நான் வளர்ந்த 'பீட்டர்ஸ் காலனி' சூழலில் எல்லோருமே தாய்- பிள்ளை உறவுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தோமென்றால் மிகையில்லை. அஃது அன்றைய 'சொர்க்க பூமி'. அதைப் பற்றி வேறொரு சூழலில் தனிப் பதிவே எழுதியாக வேண்டும்.

இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்களைப் போல் என் வாழ்வில் நான் யாரையுமே சந்தித்ததே இல்லை. 'நாயாடி' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. நல்லவேளையாக அப்படியான ஒரு சூழல் இன்று இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்கிறேன். 'நாயாடி'களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட துயர சூழலை அறிந்ததுண்டா? நாயாடிகளைக் கண்ணால் பார்த்தாலும் தீட்டுப்பட்டுவிடுமென்ற எண்ணம் அப்போது இருந்ததாம். எப்படி ஒரு மனிதரைப் பார்த்தாலே தீட்டு? தீட்டென்றால் என்ன? எனக்குத் தெரிந்து அசுத்தம் என்பதே அதன் பொருள், எப்படி அது பார்வையால் உண்டாகும்? சகமனிதரை எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த முடியும்? இப்படி பற்பல கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. என்னால் இதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்க முடியாத இந்தத் துயரைக் கண் முன் விரியச் செய்து ஒவ்வொரு கதை மாந்தரின் முகத்தையும் என் கண்களில் காட்சியாக்குகிறார் தனது எழுத்தாளுமையால் ஜெ.மோ.

காப்பன் என்ற கதைநாயகன் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவர் வடுக்களைக் கைகளால் நானே தடவிப் பார்த்துவிட்டேன். அவருடைய வலியை என் விரல்கள் தொட்டு வருடி சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறது. இப்படியெல்லாமுமா ஒர் உயிருள்ள ஆத்மாவை வதைப்பது? 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். ஆனால் மனிதப் பிறவியும் இன்ன சாதியில்தான் பிறத்தல் நன்று என்பதாக நம் வாழ்வியல் இருந்துள்ளது. நாமெல்லாம் அதன் சாட்சிகள் என்றெண்ணும் போது பதைபதைக்கிறது மனது.

ஆஸ்கர் நாயகர் இயக்குனர் அஸ்கர் பர்ஹதியின் படத்தில் ஒரு காட்சிப்படுத்தலில் ஏற்படும் வலிமையை, தாக்கத்தை எப்படி இவர் எழுத்தின் மூலம் ஏற்படுத்த முடிகிறது என்று திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்கிறார். காப்பனின் தாயைப் பன்றி என்கிறார், தெருநாய் என்று விளிக்கிறார், முலைகளை அழுக்கு மூட்டை என்கிறார், 'யானை டாக்டரில்' புழுவை கைக்குழந்தையென்றார். இதிலும் 'நகரம் நாயாடிகளைக் குப்பைகளாக ஒதுக்கினாலும் அவர்கள் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்' என்று குறிப்பிடுகிறார். வயதானால் வார்த்தைகளும் சுருங்கிவிடும் என்பதை மிக அழகாக 'சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன்' என்று பிரிக்கிறார். இப்படிக் கதை முழுக்க ஒவ்வொரு வரிகளிலும் வலியோடு பேசியுள்ளார் எழுத்தாளர். இதை எழுதும் போது, அதுவும் பாதிக்கப்பட்ட காப்பனாக தன்னை நினைத்துக் கொண்டு எழுதும் போது மன ஆழத்தில் ஏற்பட்ட உணர்வின் வெடிப்பாக இக்கதை விரிகிறது.

படிக்கும் போது பேசும் ஒவ்வொரு பாத்திரமும் நாமாகிவிடுகிறோம். சாக்கடையிலும் அழுக்கிலும் ஊறிய அந்தத் 'தாய்ப்பன்றி'யின் முகத்தையும் அவரின் புரிந்து கொள்ள முடியாத பதற்றத்தையும் நமக்கு கடத்திவிடுகிறார். தாயைச் சமாதானப்படுத்தும் போது காப்பனாகவும் நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம். விளிம்புநிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோம். கையாலாகாதக் கழிவிரக்கத்தோடு நாமும் அவமானமாய் உணர்கிறோம். ஆனால் அலட்சியப்படுத்தும் மக்களோடு நாமும் ஒர் அங்கமாக இருக்கிறோம் என்பதில் மட்டும் எனக்குப் பெரிய சங்கடம்.

வித்தியாசமான, நான் எங்கேயுமே கேட்காத சொல்வழக்கு இந்தக் கதை முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. அந்தப் புரியாத மொழியையும் நமக்குப் புரிய வைக்கிறார் விளக்காமலே. எப்படி இதெல்லாம் சாத்தியம்? இந்தக் கதையை ஆழமாக வாசித்தால் தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக உணர்ந்து நாற்காலியில் உட்காருவது கூடாது, மேல் அங்கி உனக்கு வேண்டாம், மேல்மட்டத்தாரை பார்த்தாலே ஓடி ஒதுங்குபவரும் கூட ஒரு மேல்மட்ட பெண்ணைப் பார்த்தால் பயப்படாமல் கோபத்தை வெளிப்படுத்துவது, பொருட்களைத் தூக்கி வீசுவதும் சுலபமாகிவிடுகிறாது. "சுபா மீது அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது, எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு" என்று தன் தாயின் கோபத்தை புரிந்துக் கொள்பவராக வரும் சொற்களைப் படிக்கும் போது எந்த சாதியென்றாலும் எல்லாவற்றையும் விட மிகத் தாழ்ந்த சாதி ஒரு பெண் என்ற உண்மை வலிக்கவே செய்கிறது.

பிறப்பையும் அதன் பின்னணியையும் வைத்து ஒதுக்கப்படும் ஒருவர் திக்கித் திணறி நீந்தி மேலே வரும் போது மூச்சடைக்க வைத்து மீண்டும் அழுத்துவதைக் கதையாக 'நூறு நாற்காலிகள்' என்று தலைப்பிட்டுள்ளார். கடைசியில் "அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன்" என்று வாசிக்கும் போது "இல்லை, நீ போராடு உன்னால் முடியுமென்று' 'திக் பிரம்மைப்' பிடித்தவளாக எனக்கு நானே பிதற்றிக்கொண்டிருந்தேன். என்னவோ என் தவிப்புக்காகவே 'நூறு நாற்காலிகளை' வேண்டி நிற்கிறார் என்பது போல் முடிந்தது கதை. அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தக் கதையை வாசித்தாக வேண்டும். எப்படியான சமூதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது இருந்தோம் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காகவாவது.

படித்து முடித்துவிட்டிருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன். ஆசிப்பிடம் இதைப் படித்தீர்களா? இந்தக் கதையே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அறத்தை எடுத்து அவர் கையில் திணித்து இந்தக் கதையைப் படியுங்களேன் என்றேன். எல்லாம் ஒரு சுயபரிசோதனை செய்துக் கொள்வதற்காகத்தான். எனக்கு மட்டும்தான் இப்படிக் கிறுக்கா அல்லது படிக்கும் எல்லாருக்கும் ஏற்படுமாவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஜெ.மோ.வை தொலைபேசியில் அழைத்து இது பற்றிச் சொல்லி கைப்பேசியை என்னிடம் தந்தார். நானும் திடீரென்று தந்துவிட்டாரே என்று திக்கித் திணறாமல் மிகச் சரளமாக மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லி முடித்தேன் அவரைப் பேசவிடாமல். மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தந்த அவதாரமெடுத்து அந்தந்தக் கதையை எழுதியதாகச் சொன்னார். மிகவும் பரிச்சயப்பட்டவர் போல பேசினார். எனக்கும் அப்படியே இருந்தது. நான் எப்போதும் கதையிலும் எழுத்திலும் ஏற்படும் பிரமிப்பை எழுதுபவர் மீது செலுத்துவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி